> மகப்பேறு மருத்துவமனை
> அவசரச் சிகிச்சைப் பிரிவு
> அறுவை மருத்துவப் பகுதி
>
> கண்கள் உறக்கம்கேட்டு கெஞ்சிநிற்க
> உடல் சோர்ந்துபோய் ஓய்வுகேட்க
> உள்ளம் ஏங்கிப்போய் செய்திக்காக
> அரங்கவாசலில் வாசலில் தவமிருக்கிறது
>
> பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
> படபடப்போடு அதிர அழைத்து
> அவசரமாய் ஏதோ பெயரெழுதி
> அவன் கையில் திணிக்கிறார்
>
> **
> *"காலம் கடந்து விட்டது; ஆனாலும்
> கடைசியாய் ஒரு முயற்சி ..
> கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
> கருணை அவன் வைத்துவிட்டால்
> இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்" *
>
> மருத்துவமனையில் இல்லாத
> மிக முக்கியமான மருந்தாம் !
> தொலைவில் தான் கிடைக்குமாம் !!
> தலை தெறிக்க ஓடுகிறான் ....
>
> இருச்சக்கர வாகனம் எடுத்து
> நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
> நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
> நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது
>
> பத்து வருடக் கனவு
> பாதியிலேயே கலைந்து விடுமா?
> கூடும் இடத்தில் ஏளனம்...
> குடும்பத்திற்குள்ளும் அவமானம்...
> *மலடி* என்ற மறைமுகப் பேச்சையும்;
> *முடியாதவன்* என்ற மனம் வேகும் ஏச்சையும்;
> மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...*
> முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?
>
> திடீர் குறுக்கீட்டால்
> தொடர்பு தடைபட்டு
> தடாலென நிறுத்துகிறான்..
> நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
> நடுங்கிப்போய் நிற்கிறான்..
>
> மிரண்ட பார்வையோடு
> மேலும் தொடர வழி தெரியாமல்
> குட்டிப் பூனை ஒன்று
> குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது
>
> ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
> இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது..
>
> *"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
> "சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
> "உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
> "பெரிய கடவுள்னுதான் நெனப்பு!" *
>
> ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
> எதுவும் அவன் காதில் விழவில்லை
> **
> *'அங்கீகரிக்க அவசியமில்லை
> ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
> அவமானப்படுத்தாமல் இருக்கலாமே' *
>
> வேதனையைத் தாங்கிக்கொண்டு
> பூனையையும் தூக்கிக்கொண்டு
> மன வருத்தத்தோடு அங்கிருந்து
> மருந்து வாங்கக் கிளம்புகிறான்
>
> அதே நேரம் *அங்கீகாரம் *
> அவனுக்கு *அங்கே* கிடைத்துவிட்டது !
> **
> *தலை தப்பிய சுகப்பிரசவம் ..
> தாயும் சேயும் நலம்....*
>
Monday, November 9, 2009
மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...
Labels: online tamil kavithai, online tamil stories, tamil kavithai, tamil kavithaikal, tamil stories, tamil story
Posted by BALA KRISHNAN at 7:46 PM 0 comments
Thursday, November 5, 2009
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்
ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.
சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்
மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது
மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது
இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........
தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........
தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........
பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........
குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்........................
பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........
எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்
இதோ.....
சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!
கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..
அடடா,,,, !!!!!!!!!!
உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!
உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!
என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே
குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....
என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி
இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,
மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
*’ நானிருக்கிறேன் ‘* என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!
ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !
என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் *மன* வாழ்க்கை புதிதாய் !!
நான் தேசபக்தன் அல்ல பாமரன்
“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.
எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.
“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.
ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்
“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”
அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.
“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.
இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.
“என்ன பழமொழி...?”
“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”
“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.
நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.
எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...
தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்
வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...
நிலங்களை இழந்து...
வாழ்க்கையை இழந்து...
விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக
வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...
சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...
பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...
இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...
நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...
இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற
ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.
ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.
விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.
அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.
போனை வைத்து விட்டார் நண்பர்.
இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்
வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?
இந்துஸ்தானோ...
பாகிஸ்தானோ...
இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.
அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.
மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...
விவசாயக் கூலியோ...
மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.
வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.
கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.
எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.
ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.
அப்படிதான் கிரிக்கெட்டும்.
மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.
“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று
கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.
ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....
அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?
அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?
சூப்பர்தான் போங்கள்.
ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.
அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.
அது உட்சாதிச் சண்டையாக...
சாதிச் சண்டையாக ...
மதச் சண்டையாக...
மாநிலச் சண்டையாக...
உருவெடுத்து தற்காலிகமாக
இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.
அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.
இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.
ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.
இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்
நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...
பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...
உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...
ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
என்னே தேசபக்தி...?
பாவம்...
இவர்கள் விளையாட்டை
போராகப் பார்க்கிறார்கள்
போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
தண்டனை நம்மைப் போன்ற
‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?
Monday, November 2, 2009
உணர்வாய் மனிதா உண்மையை
முகவரியில்லாத அநாதி இறைவன் படைத்த
அனாதைக் குழந்தை இந்த உலகம் ......
முதலும் முடிவும் இல்லாதவன்
எனினும் எங்கும் முழுமையாய் நிறைந்திருப்பவன்
வெறும்பையன் (nothingness) படைத்ததினால்
கிடைத்த பெரும் பயன் உலகில் உயிர்கள் ....
அவனே ஒன்றுமில்லாதபோது
மனிதன் எம்மாத்திரம் .....
இதை அறியாத சில மனிதர்கள்
பணம், பதவ,ி அதிகார ஆணவத்தால்
தன்னை உயர்வாக (somebody)
எண்ணிக்கொள்கிறான் ...
எல்லா உயிர்களுக்கும் பிரதானமாயிருக்கும்
பிராண வாயு தன்னை விளம்பரம் செய்வதில்லை ...
நீர் நிலைகள் நிறைந்திருக்க நிலைத்திருக்கும்
உலகம், இருந்தாலும் இது தனக்கு
வீதிக்கொரு விளம்பரப் பலகை வைப்பதில்லை ...
பெரும் நெருப்பில் பிறந்த உலகம்
சிறு நெருப்பாய் இருக்கும் உயிர்களுக்குள்
இருந்தாலும் இவை
தனைக்கொரு கட்சி அமைப்பதில்லை ...
நிலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க
வாடகை வசூலிப்பதில்லை பூமி ...
விரிந்து பரந்த ஆகாயம் தன்னை
பெரிதாக எண்ணுவதில்லை ....
ஒன்றுமில்லாமல் வெடித்துப் பிறந்த உலகம்
ஓர் நாள் வெடித்து மறையும் ஒன்றுமில்லாமல் ....
உணர்வாய் மனிதா உண்மையை - உணர்ந்து
உயர்வாய் வாழ்ந்திடு ........
TO READ *"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது" * CLICK HERE..
Labels: online tamil kavithai, online tamil stories, tamil kavithai, tamil kavithaikal, tamil stories, tamil story
Posted by BALA KRISHNAN at 8:43 PM 0 comments
Wednesday, October 28, 2009
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
>
> ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
> ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
> ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
> ஆழ்மனதுள் உன்நினைப் பு
>
> கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
> ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
> ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
> வார்த்தையிலென் மூச்சிருக் கு
>
> ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
> ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
> ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
> யாரென் நிலைசொல்வா ருனக்கு
>
> சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
> செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
> சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
> மெத்தைக்குள் வச்சிருக் கேன்
>
> ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
> யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
> உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
> கன்னியிருப் பாளிங்கேக் காத்து
>
> என்றும் மறையாத என்மனச் சூரியனே
> இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
> காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
> காத்திருப்பேன் நான்கரையா மல்
>
> கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
> துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
> காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
> காத்திருப்பேன் உன்னைநான் இங்கு
>
> [ அமைப்பு : வெண்பா - இன்னிசை
> நன்றி : ILLAM GROUP ]
>
>
உண்மையின் நெருடல்
> ஒட்டு மொத்த குடும்பமும்
> ஒரு தோளின் மேல் தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
> தலைமகன் நான்.
>
> சன்னல் கதவுக்கு ஒன்று
> வாசல் காலுக்கு இரண்டென
> வீட்டுக்கே மூச்சுத் திணறும்
> கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்
>
> மணம் முடித்த அவளுடன்
> மனம் விடுத்துப் பேசவே...
> வந்தவளுடன் தனிமையில்
> தொந்தரவின்றிப் பேசவே...
> வாரம் ஒன்று முழுதாய் ஆனது
>
> மண வாழ்வைத் தெடங்கவே
> மாதம் மூன்றுக்கும் மேலானது
>
> இயந்திர உலகில் கரையேற
> இயந்திரம் போல் இயக்கம்..........
>
> தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
> திருமணம் , புகுந்தவீடு பயணம்........
>
> தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
> தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........
>
> பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
> பராமரிப்பு , கடைசிப் பயணம்...........
>
> குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
> திருமணம் ,வெளிநாடுப் பயணம்........................
>
>
> பயணம்,பயணம்,பயணம்............
> பயணத்தைத் தொடர்ந்து
> பயணிக்க வைக்க எனக்கும்
> சயனம் இல்லாத பயணம்.........
>
> எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
> வந்துசேர்ந்தது பணி ஓய்வும்
>
> இதோ.....
>
> சுற்றியிருந்த உறவெல்லாம்
> விட்டுச் சென்ற பிறகு நான்...
> தலையணை தேடும் மனதுடன் !
> தனிமையில் தொடரும் அவளுடன் !!
>
> கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
> நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
> அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
> அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..
>
> அடடா,,,, !!!!!!!!!!
>
> உண்மையது எனக்கு அப்போதுதான்
> உறைக்கத் தொடங்கியது .....!
>
> உதறிச் சென்றொருக்கெல்லாம்
> விரட்டித் தேடி செய்தேனே !
> எனை நம்பி வந்தவளை
> நினைக்க மறந்தே போனேனே !!
>
> என்னவளின் எண்ணங்களை
> எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
> கடமையின் நெரிசலில் அவளின்
> ஆசைகள் எதையும் அறியவியில்லையே
>
> குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
> குனிந்த படியே இருக்கிறேன்....
> நேருக்கு நேராக அவளை
> நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....
>
> என்முகத்தை தனக்குள் அணைத்து
> தன்மூச்சை எனக்குள் அழுத்தி
>
> இச்சென முத்தம் ஒன்றை
> உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
> மெதுவாய் கையிலிருந்த உணவை
> ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,
>
> மெல்லத் திரும்பி நடக்கிறாள்
> மெளனமாய் சிரித்து விட்டு !
> *’ நானிருக்கிறேன் ‘* என்ற சேதியை
> நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!
>
> ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
> அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !
>
> என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
> எங்கோ முடியப் போகும் தருணத்தில்
> இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
> எங்களின் *மன* வாழ்க்கை புதிதாய் !!
>
>
என்ன செய்தாய் என்னை...
"நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி"
"உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி "
"சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி "
"நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"
"உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"
"கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"
என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!
Labels: online tamil kavithai, online tamil stories, tamil kavithai, tamil kavithaikal, tamil stories, tamil story
Posted by BALA KRISHNAN at 9:23 PM 0 comments

