Thursday, July 25, 2013
தேவை, தேடுதல், போராட்டம், குழப்பம் ஏன்?
வாழ்க்கை எனும் படகில் பயணம் செய்ய தேவையானவற்றை தேடுதல் மூலம் பெற்று கொள்கிறோம். தேவை என்ற ஒன்றால் தொடங்கிய தேடுதல் பூமியை விட்டு போகும் வரை முடியவில்லை.எதை தேடி கொள்கிறோமோ அதற்கு ஏற்றவாறு தேடி பெற்று கொண்டவற்றிலிருந்து இன்பங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் இன்பங்கள் அளவு முறை மீறும் போது அதுவே துன்பமாக மாறுகிறது. தேடுதலில் சந்திக்கின்ற போராட்டங்கள், குழப்பங்கள் இவையின் முடிவு எல்லாவற்றையும் பெற்று கொண்டோம். ஆனால் பெற்று கொள்ளாமல் இருந்த போது இருந்த சுகம், அமைதி இப்போது இல்லை. இங்கே தான் குழப்பம் நீடிக்கின்றது.இதை தான் வாழ்க்கை என்பதா?வாழ்க்கை இது தானா?ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கின்ற மனிதன் அதற்கு அடுத்த நிலையை அடைய போராடி கொண்டு இருக்கின்றான். முடிவு வாழ்க்கை முடியும் வரை தேடுதலும் நிற்பதில்லை போராட்டமும், குழப்பமும் நம்மை விடுவதும் இல்லை.தேடுதல் எப்படி நிகழ்கிறது?ஒவ்வொரு சூழ்நிலை, அதற்கு ஏற்ற வயது, அப்போது அதற்கு ஏற்ற தேவை இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை தேவை நீடிக்கிறது. ஆதலால் தேடுதலையும் நிகழ்த்தி கொண்டு இருக்கிறோம். தேடுதல் தேவைதானா?தேவை தான்! வாழும் போது நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நமக்கு ஏற்படுகின்ற உணர்வுகளை போக்கி கொள்ள எல்லாவற்றையும் தேடி தான் பெற்று கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேடுதல் நிகழும் போது மனம் என்ன கூறுகிறது."எனக்கு இது கிடைத்து விட்டால் நிம்மதியாக, அமைதியாக இருந்து விடுவேன் என்று. ஆனால் அது கிடைத்த பிறகு எங்கே போனது நிம்மதியும், அமைதியும்.அப்படியென்றால் கிடைக்க பெற்றதை அனுபவிக்கும் போது முழுமயாக அனுபவிக்காமல், திருப்தி இல்லாத நிலையில் இருந்து வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலை மாறும் பொழுதுதான் தேடுதலின் அளவு குறையும். போராட்டமும், குழப்பமும் நீங்கும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் நீ அனுபவிக்கும் போது அதை முழுமையாக அனுபவிக்க கற்று கொள். அதை இயற்க்கைக்கு முரணாகவும், தவறுதலாகவும் பயன்படுத்தாமல் ஒரு நேரிய வழியில் பின்பற்ற வேண்டும்.பசிக்கும் போது சுவையான உணவை உண்கின்றோம். இல்லை நமக்கு பிடித்த உணவை உண்ண போகிறோம் என்றால், அதன் சுவையை ரசித்து உண்ண வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலிலும் முழுமையாக செயல்பட வேண்டும்.குழப்பம் வர காரணம் தேடும் போதே, அந்த செயலில் செயல்படும் போதே ஒரு ஒவ்வாத நிலை நமக்கு பிடிக்காத நிலை இருந்து வந்தால் மனம் அதை முழுமையாக ஏற்று கொள்ளவில்லையென்றால், நாம் அதில் முழுமையாக செயல்பட மறுக்கிறோம். இதனால் அதை பெற்று கொண்ட பிறகும் முழுமையாக, திருப்தியாக அனுபவிக்க மனம் மறுக்கிறது.இதை சரிபடுத்த தேடும்போதே மனதை விழிப்பு நிலையில் ( ) வைத்து கொண்டு, இது தேவையா, இது எனக்கு, என் வயதுக்கு, என் குடும்பத்துக்கு என் சமுதாய சூழ்னிலக்கு ஒத்து வருமா இதை நன்றாக புரிந்து கொண்டால் தேடும் அனைத்திலிருந்தும் ஒரு நல்ல அனுபவமும், இன்பமும் வேண்டாதவற்றை பெற வேண்டாம் என்ற மனநிலையும் வந்து விடும்.இந்த மனநிலை வந்து விட்டால் இருக்கிறவற்றை வைத்து கொண்டு எப்படி முழுமையாக வாழ்வது. அதை பிறருக்கும் நமக்கும் துன்பம் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்ற ஒரு பக்குவ நிலை நம்முள் நிலை பெற தொடங்கும். இந்த நிலை வரும் போது தான். நாம் வாழ ஆரம்பிக்கிறோம். ஏன் என்றால் இங்கே எதை செய்தாலும் ஒரு திருப்தி, நிம்மதி இருப்பதை உணர முடியும்.முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்குள்ளே பல கேள்விகள் எழ ஆரம்பிக்கும். அந்த கேள்விகளுக்கான விடைகளை நீங்களே அமைதியாக முயற்சியோடு எண்ண ஆரம்பியுங்கள்.விடை உங்களுக்கே புலப்படும்.
ஆசையும் ஞானமும்
ஆசையும் அடக்கினால் அது பிதுங்கிக் கொண்டு வேறுவேறு துன்பங்களாக உருவாகும். ஆராய்ந்தால் பிறந்த இடத்திலேயே அது ஒடுங்கும். ஆசை நிறைமனமானால் மற்ற எல்லா நலன்களையும் பெறுவது எளிதாகச் சாத்தியமாகி, வாழ்வின் இலட்சியமே நிறைவேறிய ஓர் உணர்வு உண்டாகும்.
ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாகக் கருதும் பேதம் மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.
ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத்தக்க வகையில் பண்படுத்தி - ஒழுங்குபடுத்திவிட்டால், அதுவே ஞானமாகவும் மலரும்.
யோகிராஜ் வேதாத்திரி
உலகக் குடும்பம்
நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.
எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்கநியதிகளைக் கொண்டும், வான் மண்டலத்தையும், உலகையும் உருவாக்கி, இந்த அழகிய வளம் நிறைந்த உலகின் மீது நம்மையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட்பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும் போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?
-- யோகிராஜ் வேதாத்திரி
கருமையப் பதிவுகள்
ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.
மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.
-- யோகிராஜ் வேதாத்திரி
மெளனம்
நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.
-- யோகிராஜ் வேதாத்திரி
விலங்கினப் பதிவு
ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-
1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.
2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.
3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.
என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.
-- யோகிராஜ் வேதாத்திரி
கருமையச் சிறப்பு
வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.
எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.
-- யோகிராஜ் வேதாத்திரி
முன்பின் பிறவிகள்
ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.
பின்னோக்கிச் செல்லும் உருவப் பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப் பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்
ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவை அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாவர்.
ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறிய வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி
எதையும் சாதிக்கலாம்
ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம்.
நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று. செயல் திறன் போயிற்று, நற்குணங்கள் போயின, எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது.
ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்துவிட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி
மனதின் மூன்று நிலைகள்
உயிரின் படர்க்கை நிலையில் மனம் இயங்கும் நிலைகளை மூன்றாகப் பிரித்துக் காணலாம். அதாவது மேல்மனம் அல்லது புறமனம், நடுமனம், அடிமனம் என்ற மூன்று நிலைகளாகும். இதில் அடிமனத்திற்கும், புறமனத்திற்கும் தொடர்புபடுத்தி இருப்பது நடுமனமாகும். இதில் நடுமனம் தான் மிகவும் முக்கியமானது.
உணர்தல், துய்த்தல், கணித்தல், சிந்தித்தல், பதிவு கொள்ளல் என்ற ஐவகைச் செயல்களைக் கொண்ட மனமானது தேவை, பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பம் இவற்றால் புலன்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு செயல்புரியும்போது அச்செயல் பதிவுகள் அதனதன் அழுத்தத்திற்கேற்ப மேல்மனம் அல்லது புறமனம் (Conscious mind) நடுமனம் (Sub-Conscious mind) அடிமனம் (Super Conscious mind) என்ற மூன்றிலும் பதிவுகள் ஏற்படுகின்றன.
தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே இந்திரியப் பதிவு (ஞானகர்மேந்திரியப் பதிவுகள்). இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல் மனம் அல்லது புறமனமாகும்.
தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாகிறது. இதுதான் நடுமனம்.
இவைகள் அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத்திரளில் பதிவாகி விடுகின்றன. இதுவே அடிமனம்.
-- யோகிராஜ் வேதாத்திரி
ஆன்மாவின் மூன்று நிலைகள்
காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.
கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.
சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.
தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி
உயிரும் மனமும்
உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.
வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.
இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.
தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.
-- யோகிராஜ் வேதாத்திரி
கர்ப்பகாலப் பொறுப்புகள்
குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.
மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.
நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.
-- யோகிராஜ் வேதாத்திரி
வலி, நோய், மரணம்
இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் என்ற முன்றில் ஒன்று ஏதாவது ஒரு காரணத்தால் தடைப்பட்டாலும் திசை மாறினாலும், வெறியேறினாலும், அளவில் குறைந்தாலும், ஓட்டத்தில் குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அனு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.ஓர் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், மற்ற இரண்டு ஓட்டங்களிலும் தடை உண்டாகும். அங்கு மின்குறுக்கு ஏற்படும். இந்த தடை அல்லது தேக்கமே வலியாக உணரப்படுகிறது.இந்த தடை சிறிது நேரம் நீடிக்கும் போது அது "வலி".இந்த வலி இடத்தால் விரிந்தும், காலத்தால் நீடித்தும் இருக்கும் போது அது "நோய்" எனப்படுகிறது.பொதுவாக வலி ஏற்பட்டவுடனேயே அதை சரி செய்வதற்கு உயிர்த்துகள்கள் தடை ஏற்பட்ட இடத்திற்கு வரும். தற்சுழற்சி வேகம் அதிகம் கொண்டு அதிக சிவகாந்த ஆற்றலை தந்து அந்த வலியை சிறிது நேரத்திலேயே போக்கி விடும். இயற்கையாகவே உடலைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இத்தன்மை உயிர்த்துகளுக்கும் மாறி மின்குறுக்கு ஏற்படும் போது தான் வலி நோயாக மாறுகிறது. சீவகாந்த இருப்பை அதிகம் சேமித்து வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கும்.அதற்கும் மேலாக உடலில் உள்ள ஆற்றல் வெகுவாக குறைந்து ஈடு செய்ய முடியாத நிலையில் உடலின் இயக்கங்கள் நின்று விடுவதே "மரணம்" எனப்படுகிறது.விந்துநாதக் கலயத்தில் மின்குறுக்கு ஏற்பட்டு அது உடைந்து விந்துநாதம் முழுவதுமே வெளியேறி விடுவதே மரணமாகும்.உடலிலுள்ள எந்த உறுப்பிலும் எந்த நோய் இருந்தாலும் அந்த இடம் உடலிலுள்ள சீவகாந்த ஆற்றலை வீணாக்கும் ஓட்டையாகி விடுகிறது. ஒரு நோயினால் சீவகாந்தத்தின் வெளியேற்ற அளவுக்கு ஏற்ப நிமிடங்களிலோ, மணிக்கணக்கிலோ, சில நாட்களிலோ, மாதங்களிலோ, ஆண்டுகளிலோ உடலிலுள்ள காந்த ஆற்றல் முழுவதுமே வரண்டு போகலாம். அதன் விளைவாக இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் ஆகியவை சீர்கெட்டு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து விடுவதால் மரணம் ஏற்படும்.
உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம்
உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால் இந்த உடல் அணு அடுக்கு மாறுபடாமல் இருக்கிறது. உடலின் வலு குறைந்தால் அணு அடுக்கு மாறுபட்டால் உடல் நோயையோ,மரணத்தையோ சந்திக்கும் இதிலே உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இப்போது நாம் உண்ணும் உணவு 7 தாதுக்களாக மாற்றம் பெறுகிறது. இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மச்சை, சூக்கிலம் (வித்து,நாதம்) இப்படித்தான் ஒவ்வெரு தாதுக்களாக பிரிக்கபடுகிறது. இதிலே கடைசியாக பிரித்து எடுக்க படுகின்ற தாது சூக்கிலம் எனப்படும். சூக்கிலம் சக்தியை மையமாக கொண்டுதான் உயிர் உடலுக்குள் இயங்குகிறது. இரத்த சூக்கில சக்திதான் இன்னொரு உயிரை படைக்கும் ஆற்றலை பெற்றுள்ளது. பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பருவ வயதை அடையும் போதுதான் இந்த சூக்கிலம் என்ற சக்தி உடலில் ஏற்படுவதாக கருதுகிறார்கள் அது முற்றிலும் தவறான கருத்து. ஒரு குழந்தை பிறக்கும் போதே சூக்கில சக்தி அதன் உடலினுள் இருந்து கொண்டிருக்கிறது. அது மூன்று வயது வரை மூளையுடைய வளர்ச்சிக்காகவும் 3 முதல் 14 வரை உடல் உடைய வளர்ச்சிக்காகவும் செயல் படுகிறது. எனவே தான் 3 வயதுக்குள் ஏதாவது பாதிப்பு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அது மூளையை உடனடியாக பாதிக்கும். அந்த பாதிப்பு நீடித்தால் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை மூளை வளர்சி குன்றிய குழந்தையாக மாறிவிடும். இந்த சூக்கிலம் என்ற சக்தி 3 வயதுக்கு பிறகு 14 வயது வரை உடல் வளர்ச்சிக்கு முழுமையாக செயல் படுகிறது. உடல் முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்னர் சூக்கிலம் என்ற (வித்து,நாதம்) வித்து கமலபையில் அதாவது () அதில் வந்து நிரம்பபெறும். அப்படி ஆகும் போது தான் பெண்ணோ, ஆண்ணோ,பருவ வயதை அடைகிறார்கள். இந்த சூக்கிலம் என்கிற ஜீவ வித்துக்குழம்பு வாழ்க்கையில் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளது. அதை பற்றி சிறிது பார்ப்போம்.1. (பரு உடல்)2. (ஜீவ வித்து குழம்பு)3. (உயிர்ச் சக்தி)4. (ஜீவ காந்தம்)5. (மனம்)
இந்த ஐந்தின் ஒரு சேர இயக்கமே மனிதன் என்கிற வடிவமாகும். பரு உடல் என்பது கோடி கணக்கான சிற்றறைகள் ( ) சேர்ந்து இயங்கும் இயக்கமே. சிற்றறைக்கு இரு புறமும் காந்த கவர்ச்சி உண்டு. காந்த கவர்ச்சி என்பது ஜீவகாந்தம் ஆகும். இது உயிர்ச்சக்தி உடலுக்குள் சுழன்று இயங்குவதால் எழும் அலையாகும்.ஓர் உடலில் உள்ள உயிர்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில் தான் உடலில் உள்ள சிற்றறைகளின் அடுக்கு குலையாமல் நிலைத்து இருக்கும். இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம் இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி, உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில், அதற்கு வேண்டிய எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை.உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் பொறுத்திருக்கும். போதிய அளவு விந்து (ஆண் வித்து) அல்லது நாதம் (பெண் வித்து) இருந்தால் தான் உடலை நடத்தப் போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர்ச்சக்தித் துகள்கள் நிலைத்திருக்கும். இந்த வகையில் பார்க்கும் போது (விந்து, நாதம்) என்கிற சூக்கில சக்தியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும்.
Monday, July 22, 2013
எங்க வீட்டு “மொட்டைக்காளி”
காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று
யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில்
பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த
இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த
சட்டியானதால் வந்திருக்குமோ? சரி அது போகட்டும். நான் இப்போது
மொட்டைக்காளியைப்பற்றி சொல்கிறேன்.
ஐம்பதாண்டு முன் ……இதோ என் அம்மா கல்லுரலில் நீரில் ஊறிய அரிசியும் கொஞ்சம்
வெந்தயமும் இட்டு நன்றாக நைஸாக அறைக்கிறாள். “கடக் கடக் ” என்ற ஒலிக்கேற்ப
‘சாமஜவரகமனா” என்ற ஹிந்தோள ராகப் பாடலை நான் பாடிப் பார்க்கிறேன்; தாளம் அழகாக
அதில் அமர்கிறது. பாவம் அம்மா. இப்போது இருப்பதுபோல் மிக்ஸி இல்லாத நேரம்
ஆனதால் வாரத்தில் ஐந்து நாட்களாவது இந்தக் கல்லுரலை அன்புடன் அணைத்துக் கொள்ள
வேண்டும் இந்தக் காலமாக இருந்தால் கல்லுரலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்
என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் முன் காலத்தில் அரைப்பதும் தோய்ப்பதும்
மிகவும் ரசித்துச் செய்யும் வேலையாக இருந்திருக்க வேண்டும் . அந்த வேலைகளில்
இருந்த “அக்குபிரஷர்’ அவர்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியது. தவிர தன்
குடும்ப அங்கத்தினர்களுக்கென்று அன்புடன் செய்யும் சமையல் மிகவும் ருசியாகவும்
நல்ல சத்துடனும் இருந்தது. அதுவும் குடும்பத்தில் பல உறவுகளுடன் அமர்ந்து
சாப்பிட மனதுக்குள் ஒரு நிறைவும் ஏற்பட்டது. தற்காலம்போல் டிவியில் ஒரு
கண்ணும் வாயில் என்ன போகிறது என்று தெரியாமலே நன்கு மென்று சாப்பிடாமல்
இயந்திர கதியில் கவளம் கவளமாக விழுங்கி ஆபீஸுக்கு ஓடும் காட்சி அந்தக்
காலத்தில் இல்லை. அந்தக் காலத்திலும் ஆபீஸ் இருந்தது வேலை இருந்தது அத்துடன்
ஒரு கட்டுப்பாடும் இருந்ததால் இரவு பத்து மணிக்குள் படுக்கை. காலை
பிரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பு என்று வாழ்க்கை அமைந்ததில் எல்லாவற்றிலும்
ஒரு ஒழுங்கு இருந்ததது .இதனால் பிரச்சனைகள் மிகக்குறைவாக இருந்தன. அப்படியே
இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் மூத்த தலைவர்கள். தலைவிகள் அவைகளை எளிதாக
தீர்த்து வைத்தனர்.
ஐயோ எங்கேயோ திசை மாறி போய் விட்டேன். நான் சொல்ல வந்தது எங்க வீட்டு
“மொட்டைக்காளி”யைப் பற்றி ……….. ஆ..எங்கே விட்டேன் , என் அம்மா தோசைக்கு
அரைக்கிறாளா…… ஆம் அந்தத் தோசை வெந்தயத் தோசை. வெந்தயம் கலந்திருப்பதால் ஒரு
விதமான பளபளப்புடன் ரொம்ப சாப்டாக இருக்கும் .. வயிற்றுக்கு ரொம்ப நல்லது .
இந்த “மொட்டைக்காளி” அடிப்பக்கம் வழவழவென்று திருப்பதியில் மொட்டை
அடித்ததுபோல் இருக்கும் ஆனால் கருப்பு கலர். அது எப்படி கருப்பு கலர் ஆனது
என்று தெரியவில்லை. இரும்பானதால் அப்படி ஆகியிருக்குமோ என்னவோ! ரொம்ப சின்ன
சைஸ் தான் ஆனால் தூக்கினால் நல்ல கனமாக இருக்கும் இரண்டு பக்கமும் காது
கிடையாது , தூக்க வேண்டுமென்றால் இடுக்கியால் தான் தூக்கிப் பிடிக்க வேண்டும்.
முதல் நாள் அரைத்த மாவை இதோ என் அம்மா ரெடியாக எடுத்து வருகிறார். நிதானமாக
அடுப்பை எரியவிட்டு அதில் இந்த “மொட்டைக்காளி” யை அமர்த்துகிறார் பின் கொஞ்சம்
எண்ணெயை அதில் ஊற்றுகிறார் கொஞ்சம் சூடு வந்தவுடனே “சொய்” என்ற சத்தத்துடன்
ஒரு கரண்டி மாவை அதில் இடுகிறார் . பின் ஒரு பிடி வைத்த மூடியால் அந்தத்தோசையை
மூடுகிறார் . சில வினாடிகளுக்குப்பிறகு அதைத்திறக்க ஆஹா என்ன டிசைன் தோசையின்
மேல் அழகாக பல புள்ளிகள் விட்டுக்கொண்டு அதன் கலரும் வெந்தயக்கலராக மாற என்
தாய் என் தந்தைக்குப்பிடிக்குமே என்று கொஞ்சம் நெய்யும் ஊற்றுகிறார்.
கமகமவென்று வாசனை அறையைச் சுழ்ந்து கொள்ள நாக்கில் ஜலம் ஊறுகிறது . பின் அதைத்
திருப்பிப் போடாமல் எடுக்க அழகாக “கும்”மென்று உப்பிக் கொண்டு ஒரு பக்கம்
பிரௌன் கலராக இருக்க மறுப்பக்கம் புள்ளி டிசைன் போட்டபடி அழகாக இருந்தது.
கொஞ்சமாவது அடிப் பிடிக்க வேண்டுமே! தோசையின் சைஸ் ஒரு சின்ன பூரியின்
அளவுதான் இருக்கும் இதற்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்த் துவையல் அல்லது
வெங்காயத் துவையல் ரொம்பவே ருசியாக இருக்கும். சில சமயம் இத்துடன் வெல்லம்
சேர்த்து இனிப்பு தோசையாகவும் செய்வதுண்டு, கொஞ்சமாக பகோடா போடவும் இது
உபயோகமாகும் இந்த மொட்டைக்காளி க்கு என் வீட்டில் ஒரே சண்டை. வீட்டில் பலரும்
அதை அபகரிக்க முயற்சித்தனர். வீட்டுப்பெண்களும் அதில் கண் வைத்தனர் . நானும்
தான். ஆனால் அதிருஷ்டமில்லை.
அந்தச் சொத்து இன்னும் என் வீட்டில் என் தம்பியிடம் இருக்கிறது . பரம்பரையாக
வரவேண்டுமென்பதால் வம்சத்தை வளர்க்கும் மகனுக்குத்தான் அந்தச் சொத்து சேருமாம்
. அதே போல் நானும் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இந்த
பழையகால “மொட்டைக்காளி” இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.
கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
இந்தக்காலத்தில் இப்போதெல்லாம் பன்னிரண்டாவது வகுப்பு முடித்தவுடனேயெ
அமெரிக்கா ,ஆஸ்ட்ரேலியா அல்லது லண்டன் என்று பசங்கள் போய் படிக்கும் கனவைக்
காண ஆரம்பித்துவிடுகிறார்கள் . இதனால் அவர்கள் பெற்றோருக்கும் பல லட்சங்கள்
ரெடி செய்ய வேண்டியிருகிறது என்ன செய்வது ? குழந்தைகளின் சந்தோஷத்திற்காகவே
பல தாய்மார்கள் வாழ்ந்து வருகிறர்கள் தந்தையும் மிகவும் கஷ்டப்பட்டு அவர்களை
அனுப்ப முயற்சியும் செய்கிறார்கள் அப்படியும் சில சமயம் அவர்களுக்கு இதில்
வெற்றிக் கிடைப்பதில்லை .சரி கவலைப்படாதீர்கள் கும்பகோணம் செல்லுங்கள்
கும்பகோண அணைக்கரையிலிருந்து சுமார் நாலு கிமீ தூரத்தில் கோடாலி கருப்பூர்
என்ற இடத்தில் ஒரு அம்மன் கோயில் உள்ளது . அந்தக்கோயிலில் அருள் புரிபவள்
அன்னை பரமேஸ்வரி அவளிடம் செல்லுங்கள் .உங்கள் மனோபீஷ்டத்தை உருக்கமாக
சொல்லுங்கள் உங்கள் விருப்பத்தை அவள் நிறைவேற்றி வைத்துவிடுவாள் ஆனால் மனதில்
முழு அளவில் நம்பிக்கை வேண்டும் அங்கு உள்ளே இருக்கும் எல்லா தெய்வங்கள் கிராம
காவல் தெய்வங்கள் போன்ற பெயருடன் இருக்கின்றன் உள்ளே நுழைந்தவுடன் நாம்
பார்பத்து ஆலய தல விருட்சம் வேம்பும் அரசும் பின்னிக்கொண்டு வளர்ந்துள்ளன
.அந்த மரத்தின் மேடையில் வழக்கம்போல் மரத்தடி பிள்ளையார் ஒரு நாகர்
.பாவாடைராயன் திருமேனிகள் அலங்கரிக்கின்றன .
உள்ளே இருக்கும் மகா மண்டபத்தில் வலது புரம் காட்டேரி அம்மன் , சங்கிலி
கருப்பன் மதுரை வீரன் மயான புத்திரன் என்ற சன்னதிகள் உள்ளன . உள்ளே மண்டப
நுழைவாயிலில் துவாரபாலகிகள் கதையுடன் கம்பீரமாக நிற்க உள்ளே வீரபத்திரன்
கணபதி இருவரும் அமர்ந்துள்ளானர்
இனி உள்ளே கருவரையில் அன்னை அங்காளபரமேஸ்வரி கருணைப்பார்வையுடன் புன்னகை
முகத்துடன் நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கிறாள் மேலும் பிரகாரத்தில்
வைஷ்ணவதேவி,துர்க்கை , ருத்ர பரமேஸ்வரி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர் இந்தத்
தேவிகளை ஒரே நேரத்தில் விளக்கின் சுடரில் காண நாம் நம்மை மறக்கிறோம் ,
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது, இங்கு அயல் நாடு செல்ல வேண்டும்
என்றவிருப்பத்தில்வருபவர்கள் பலர் நல்ல பலன் இருக்கிறது என்ரு பலரும்
தெரிவிக்கின்றனர் எல்லாம் நம்பிக்கையே .தவிர திருமணத்தடை நீங்க,
குழந்தைபேறு வேண்டியும் பிணிகள் நீங்கவும் கூட்டம் வழிகிறது
இங்குச்சென்று வேண்டியவிட்டு வெற்றி கிடைத்தவுடன் எனக்கு ஒரு சாக்கலேட்
அனுப்பி வையுங்கள்
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா
வகுப்பினரும் செய்கின்றனர். பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத்
தேங்காய் என்பது முக்கியம். வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும்
கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன.
இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய்
செய்வார்கள். அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப்
படும். இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர்
மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப்
பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி
பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய்,
பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து
கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள்
சேர்த்துப் பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம். முதலில் தெரியவில்லை.
தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன். வீட்டுக்கு வந்ததும் தான்
தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும்.
முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும்
முக்கியமானவை.
இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும். இதற்கு மேலும்
பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. பொதுவாக
மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம் பெற்று வந்தது. இப்போதெல்லாம்
யாரும் அதைச் சீண்டுவதில்லை. இது காடரிங்காரங்க மூலம் ஒப்பந்த அடிப்படையில்
பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல். முன்னெல்லாம் வீடுகளிலேயே
செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும்
வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக
லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும்
வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள். சமையல் நம்
பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும்
ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது
என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும். கல்யாணம்
முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா
போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி
நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள். ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக
எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.
[image: Inline image 2]
இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது. இது
அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை
ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே
கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம். பல கல்யாணங்கள் இப்படி
வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை,
பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு
என்கிறார்கள். இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும்
எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள்
மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது
விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை. வெறும் பருப்புத் தேங்காயும்,
மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும். வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும்.
மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள். ஆனால் தென்
மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார்.
மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண்
செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி
செய்வதாகக் கூறுகின்றனர். பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும்,
பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர்.
எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான்
சொல்வார்கள். பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம்
தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே
மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க
வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை. நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக
என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும்
சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக்
கல்யாணம் நடந்துவிடும். சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ,
பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது. எல்லாத்துக்கும்
உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள்.
ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும்,
மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள். முன்பெல்லாம்
கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு
மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து,
பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக்
கொண்டாடினார்கள். இது மிகப் புதுமையாக இருந்தது. பல நிச்சயதார்த்தங்கள்
சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப்
பார்க்கவில்லை. காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை. அதனால் படங்கள் பகிர
முடியவில்லை. சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச்
சென்றிருந்தேன். சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். வைதிக
முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய
கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச்
சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.
கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக்
கொண்டாடலாமே எனத் தோன்றியது. அணைக்க வேண்டுமா?
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகளை மொழி பெயர்த்து வந்தாலும் உள்ளூரக்
கொஞ்சம் நம நமவென இருந்தது. எல்லாம் காப்பிரைட் குறித்தே. ஏப்ரலில் வந்த
சம்பந்தியும் அதையே சொல்ல, அதுக்கப்புறமா மேற்கொண்டு மொழி பெயர்ப்பையே
நிறுத்தி வைத்துவிட்டு திரு திவாகரின் ஆலோசனையின் பேரில் பாரதீய வித்யா பவன்
மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன். அவங்க தற்சமயம் முன்ஷிஜியின் 125 ஆவது
பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளில் இருப்பதால் தங்களால் ஏதும் செய்ய இயலாது
என்றும், சென்னை அலுவலகம் தான் தமிழ் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்கணும்
என்றும் சொல்லிச் சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். சென்னை
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டேன். காப்பிரைட் பிரச்னை பப்ளிகேஷன்ஸ் மூலமாகத்
தான் வரும்னு சொன்னதோடு, மொழிபெயர்க்கத் தடை இல்லைனும் சொல்லிட்டார். தமிழில்
பப்ளிஷ் பண்ணினால் மார்கெட்டில் விற்பனை ஆகுமானு தெரியலையேனு டைரக்டர் திரு
ராமசாமி சொல்கிறார். அதே சமயம் சொந்தமாக என்னை பப்ளிஷ் பண்ணிக்கோ அதுக்கு
அநுமதி தரோம்னு சொல்றார். மொத்தத்தில் மொழிபெயர்ப்புத் தொடரலாம் என்பதே
எனக்கு சந்தோஷமான விஷயம். மற்றவை போகப் போக. மொழி பெயர்த்ததை அவங்களுக்கு
அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கார். அதுக்குக் கொஞ்சம் நகாசு வேலை இருக்கு.
செய்துட்டு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறேன். நேரிலேயும் வந்து பார்க்கச்
சொல்கிறார். போகணும். கண்ணன் தொடர்ந்து உதவுவான் என்ற நம்பிக்கையுடன் இனி
தொடர்ந்து கண்ணன் வந்து அனைவரையும் மகிழ்விப்பான் என்றும் சொல்லிக்கிறேன்.
அதன் பின்னர் பத்து/பதினைந்து நாட்கள் முன்னர் கடுமையான உழைப்பு. :))) கண்ணன்
கதையின் முதல் பாகத்தை எடிட் செய்து தொகுத்துக் கொண்டு அவற்றைப் பிரின்ட்
அவுட் எடுக்க ஆரம்பித்தேன். பாரதீய வித்யா பவன் சென்னை அலுவலகத்தில் 22 ஜூன்
சனிக்கிழமை மதியம் டைரக்டர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆகவே
குறைந்த கால அவகாசத்தில் முடிக்கணும். பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு
எதுக்குத் தொந்திரவு? பென்டிரைவிலோ சிடியோ போடலாம்னு சொல்றவங்களுக்கு!
போடலாம் தான். அது தெரியும். ஆனால் அதைக் கணினியில் தான் போட்டுப் பார்க்க
முடியும். சிலர் பிடிஎப் கோப்பாக அனுப்பி வைனும் சொன்னாங்க. அதைப்
பார்ப்பாங்களா உடனடியாகனு சந்தேகம். ஆகவே நம் கையே நமக்கு உதவினு வீட்டிலேயே
பிரின்ட் அவுட் எடுக்க ஆரம்பித்தேன்.
எடிட்டிங் வேலை முடியவே மூணுநாள் ஆச்சு. அப்படியும் வேர்ட் நிறைய ஸ்பெல்லிங்
தப்புப் பண்ணி இருக்கேனு திட்டிட்டும் இருந்தது. கூடியவரை எல்லாத்தையும் சரி
பண்ணினேன். பிரின்ட் அவுட் எடுக்கிறச்சே இரண்டு முறை இங்க் தீர்ந்து போய்,
ஒரு தரம் இங்க் திரும்ப நிரப்பினது சரியா வராமல் போய், அதுக்குள்ளே சென்னை
கிளம்பும் நாளும் வந்துவிட்டது. சனிக்கிழமை சென்னை கிளம்பணும். வியாழனன்று
பிரின்டர் வேலை நிறுத்தம் மெகானிக்கைக் கூப்பிடவும் என் அவசரம் தெரிந்ததால்
அவரும் வந்து கிட்டேயே இருந்து வேலையை முடிக்கிற வரை பிரின்டரைத் தட்டிக்
கொடுத்து கவனித்துக் கொண்டார். பின்னர் அன்னிக்கே சாயந்திரமாப் போய் பைன்டிங்
செய்யக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஈரம் காயும் முன்னே வாங்கி வந்து கொண்டு
போகும் பையில் அடியில் வைத்து மேலே அழுத்தம் கொடுத்துவிட்டோம்.
சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பினோம். அன்னிக்குனு வண்டி தாமதம். அரை மணி
நேரம். ஒரு மணிக்குள்ளாக வித்யாபவனில் இருக்கணும். ஒரு வழியா மாம்பலத்தில்
இறங்கி ஆட்டோ வைத்துக்கொண்டு வித்யாபவன் போகையிலே பனிரண்டே முக்கால்.
டைரக்டர் மீட்டிங்கில் இருந்தார் எனினும் நான் வந்திருக்கும் செய்தி
சொல்லப்பட்டுக் காத்திருக்கச் சொன்னார். பின்னர் அவரே வெளியே வந்து
காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வழி அனுப்பிட்டு, மற்றவர்களைக்
கவனித்துவிட்டு எங்களை அழைத்தார். கொண்டு போன புத்தகத்தைக் கொடுத்தோம்.
படித்ததில் அவருக்குத் திருப்தி என்பது முகத்திலேயே தெரிந்தாலும் அவர் வாய்
மூலம் சொல்லணும்னு இருந்தோம்.
பப்ளிஷிங் பத்திப் பேசிவிட்டுப் பின்னர் என்னிடம் உங்கள் ஆர்வமும், எழுதி
இருக்கும் நடையும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தைப் போல் இருக்குனு
பாராட்டிவிட்டு எங்களுக்கு நேரேயே பவன் மூலம் பப்ளிஷ் பண்ணலாமா, அல்லது நாங்க
இன்வெஸ்ட் பண்ணிட்டு பவன் மூலம் வெளியீடு பண்ணலாமானு இரண்டு கருத்தையும்
மும்பை அலுவலகத்துக்கு அனுப்பி இருக்கார். எப்படி இருந்தாலும் பவன் மூலம்
வெளியீடு செய்வதில் அவருக்கு ஆக்ஷேபணை இல்லைனு தெரிந்தது. மேலும் இப்போது
முன்ஷிஜி அவர்களின் 125 ஆவது பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களுக்கான வேலைகள்
வேறு செய்வதால் அதை ஒட்டி வெளியிடலாம் என்றும் கூறி உள்ளார். இனி எல்லாம்
கண்ணன் கையில். அடுத்து இரண்டாம் பாகம் எடிட்டிங் செய்து அதைப் பென்டிரைவ்
அல்லது, சிடியில் எடுத்துடலாம்னு எண்ணம். அதோடு டைரக்டர் அறையிலோ ரிசப்ஷனிலோ
கணினியோ, மடிக்கணினியோ இல்லை. ப்ரின்டிங் செக்ஷனில் மட்டும் இருக்குமோ
என்னமோ! நல்லவேளையா பென் டிரைவ் கொண்டு போகலை. போட்டுப் பார்க்கிறேன்னு
சொல்லி இருப்பாரே! :))))
போகப் போகத் தெரியும். கண்ணன் துணை இருப்பான் என்ற நம்பிக்கையில்
இருக்கிறேன். இதன் முழுப் பலனும் திவாகரையே சேர்ந்தது. அவருடைய தூண்டுதல்
இல்லை எனில் இந்த மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்திருப்பேனா என்பது சந்தேகமே.
அதே போல் இப்போது வித்யாபவனை நாடுவதற்கும் பெருமளவு உதவிகள் செய்தார்.
மொத்தத்தில் இந்த மொழிபெயர்ப்பே அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒன்று. திரு
தேவ் அவர்களும் பலமுறை இது புத்தகமாக வெளியாகவேண்டும் என்பதைச் சொல்லி
வந்திருக்கிறார். அவருக்கும் என் தனிப்பட்ட நன்றி. வித்யாபவனின் டைரக்டரிடம்
முதலில் பேசியது திரு தேவ் அவர்களே.
இந்த மொழிபெயர்ப்பில் காணப்படும், குற்றம், குறைகளின் முழுப் பொறுப்பும்
என்னைச் சார்ந்தது. தற்சமயம் மூன்றாம் பாகம் மொழி பெயர்த்துக்
கொண்டிருக்கிறேன். நேற்று வித்யாபவனில் இருந்து பப்ளிஷிங் எப்படிச் செய்வது
என்பது குறித்துக் கேட்டுக் கடிதம் வந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்னால்
இயலும் என்பது புரியவில்லை. யோசிக்கிறோம். இனி போகப் போகத் தெரியும். நான்
இவற்றைத் தனியானதொரு வலையிலேயே பகிர்ந்து வருகிறேன். வேறெங்கும்
பகிர்வதில்லை. அதற்குக் காப்பி ரைட் பிரச்னை மட்டும் காரணம் இல்லை. தேர்ந்த,
திறமையான பல எழுத்தாளர்களுக்கிடையே என்னுடைய சாதாரணமானதொரு எழுத்தை வெளியிடத்
தயக்கம் என்பதும் காரணம். சும்மாவே உளறிக் கொட்டிக் கிளறி மூடுவேன் என்பதை
அனைவரும் அறிவார்களே![?][?][?][?][?][?] இனி அனைத்தும் அந்தக் கண்ணன் செயல்.
ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!
பருப்புத் தேங்காய் பற்றிச் சொல்கையில் ஒரு விஷயத்தை விட்டுட்டேன்.
திருநெல்வேலிக்காரர்கள் பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்க மாட்டார்கள்.
பருப்புத் தேங்காய் செய்முறையும் தனியாக இருக்கும். அரிசி மாவு, உளுத்தமாவு,
கடலைமாவு சேர்த்துக் கொஞ்சம் கனமான இழைகள் கொண்ட தேன்குழல்கள் செய்து, அதை
வெல்லப் பாகில் சேர்ப்பார்கள். இது ஒரு பித்தளையில் ஆன அரை அடுக்கு நிறையச்
செய்து வைத்து அதன் நடுவில் சின்னதாகக் கூம்பு போல் பருப்புத் தேங்காய் 2
பிடித்து வைப்பார்கள். முழு அடுக்கில் கிட்டத்தட்ட அப்போதைய ஒரு மூட்டை
அரிசியை வடிக்கலாம் எனில் அரை அடுக்கில் அதில் பாதி வடிக்கலாம். அப்போ
பருப்புத் தேங்காய் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
முன்னெல்லாம் ஒரு மூட்டை அரிசிக்கு பக்காப்படி ஐம்பது படி இருக்கும். இப்போ
மூட்டைனு தருவது பத்து கிலோ, பதினைந்து கிலோ, இருபது, இருபத்தைந்து கிலோ
பைகள். ஆகவே உங்கள் கணக்குப் பழைய முறையில் போடும் கணக்காக இருக்க வேண்டும்.
:)))) அதோடு பருப்புத் தேங்காய் வகைகளில் பூந்திப் பருப்புத் தேங்காயை
மறந்துட்டேன். :))))
ஆச்சு, பக்ஷண வேலை முடிஞ்சாச்சு; வடாம், வற்றல் போட்டாச்சு, துணி, மணி
எடுத்துத் தைக்கக் கொடுத்தாச்சு. எல்லாம் செய்த நாம் முக்கியமானதை
விட்டுட்டோமோ? இல்லை; அதெல்லாம் விடலை. என்னனு கேட்கறீங்களா? அதான்
சமையலுக்கு ஆள் போடுவது! கல்யாணம் நிச்சயம் ஆனதுமே இப்போல்லாம் காடரிங்
கான்ட்ராக்டரைப் பார்த்தாகணும். பல பெரிய கான்ட்ராக்டர்கள் சத்திரங்களில்
திருமண முஹூர்த்தத் தேதிகளுக்கு முன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுகின்றனர்.
நாம் கூப்பிடும் கான்ட்ராக்டர் அப்படிச் சத்திரங்களில் முன் பதிவு செய்தவராக
இருந்தால் அவரே சத்திரத்துக்கும் சேர்த்து நம்மிடம் பேசிவிடுவார். இல்லை எனில்
சத்திரக்காரர்களை நம்மைச் சந்தித்துப் பேசச் சொல்லுவார். கல்யாணத் தேதி உறுதி
செய்துவிட்டுச் சத்திரத்துக்கு அலையும் மக்கள் இப்படி ஒரு வசதியா என
நினைத்துக் கொண்டு ஒத்துக்கொள்வார்கள். 1996-ஆம் வருடம் நடந்த எங்கள் உறவினர்
கல்யாணத்தில் அம்மாதிரி நடந்தது. நல்லவேளையாகச் சத்திரம் நிறைய அறைகளோடு
இருந்தாலும், சமையல், சாப்பாடு சோபிக்கவில்லை என்பதோடு சரியாகக் கவனிக்கவும்
இல்லை. ஜூலை மாதம் கல்யாணம் நிச்சயம் செய்த பின்னர் செப்டம்பர் மாதத்
தேதிகளில் சத்திரம் கிடைக்காமல், அக்டோபரில் சத்திரம் கிடைத்த முஹூர்த்தத்
தேதிக்குக் கல்யாணம் மாற்றப் பட்டது.
பார்க்க இது வசதியாகத் தோன்றினாலும் சத்திரத்து நிர்வாகிகளுக்கும், சமையல்
கான்ட்ராக்டர்களுக்கும் இடையில் எழுதப் படாத ஒப்பந்தம் இருக்கிறது.
இப்போதெல்லாம் சத்திரங்கள் அடுத்த ஜனவரி 2014 முஹூர்த்தங்களையும் தாண்டி
முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அதோடு வாடகையும் அதிகம். மதுரையில் தானப்ப
முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் மங்கள நிவாஸில் திருமணம்
நடத்த முதலில் பணம் வாங்கவில்லை. வாங்க ஆரம்பித்த பின்னரும் குறைந்த தொகையே
வாங்கினார்ர்கள். ஆனாலும் யாரும் அங்கே கல்யாணம் செய்ய முன்பதிவு
செய்யமாட்டார்கள். அக்கம்பக்கத்து வீடுகளை இணைத்து வாசலில் பெரிய பந்தல்
போட்டு மணல் பரப்பி மேடை அமைத்துக் கல்யாணம் செய்துவிடுவார்கள்.
அக்கம்பக்கத்து வீடுகளில் மனிதர்கள் அந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள்.
இப்போதும் சமையல் காடரிங் ஆட்களிடம் விடாமல் சொந்தமாக சாமான்களை வாங்கிக்
கொடுத்துச் சில கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சாமான்களை நாமே
சமையல்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கெனத் தனியாகப் பொறுப்பான
ஒருத்தரை நியமிப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் இந்த அறையை உக்கிராணம் என்றே
அழைப்பார்கள். பல கல்யாணங்களிலும் இந்த உக்கிராணம் பார்க்க சமையல்காரர்களே
தங்களுள் ஒருத்தரை நியமிக்கச் சொல்வார்கள். இதை ஏற்காமல் வீட்டு மனிதரில்
நெருங்கிய ஒருவரைச் சொல்வதும் உண்டு. இம்முறையில் பின்னால் மிஞ்சும் மளிகை
சாமான்களில் பிரிக்காதவற்றை நாம் வாங்கிய கடையிலேயே கொடுத்துவிடலாம். வீணாகும்
பொருட்களான காய்கள், பழங்கள், வாழை இலை போன்றவை அக்கம்பக்கம் பகிர்ந்து
கொடுத்தும் சில நாட்களுக்கு வரும். பிரித்த மளிகை சாமான்கள் வீட்டு
உபயோகத்துக்கு வந்துவிடும். அவை குறைந்தது இரண்டு மாதங்களாவது
ஓட்டும்படியாகவே இருக்கும்.
கல்யாணச் செலவில் தடுமாறி இருக்கும் குடும்பங்கள் இம்முறையில் ஓரிரு
மாதங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும். விறகிலிருந்து வாங்கிப்போடுவார்கள்.
இப்போது சாதாரணமாக ஒரு இனிப்பு, வடை, பாயசம், வறுவல், அப்பளம், ஒரு கறி, ஒரு
கூட்டு, சாம்பார், ரசம், மோர்,சாதம், பருப்பு, ஊறுகாய் என்ற குறைந்த பக்ஷத்
திட்டத்துக்கே ஒரு இலைக்கு நூற்றைம்பதில் இருந்து இருநூறு வரை, நாம் அழைக்கும்
கான்ட்ராக்டரின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்திருக்கின்றனர். நாம் சாமான்
வாங்கிச் செய்தால் இதில் பாதிப் பணம் கூட ஆகாது. ஆனால் மேற்பார்வைக்குச்
சரியான ஆட்கள் இருக்க வேண்டும். கல்யாணத்தன்றோ அல்லது முதல்நாளோ வைக்கும்
ரிசப்ஷனில் போடப் படும் ஸ்பெஷல் சாப்பாடு, நாம் தேர்ந்தெடுக்கும் மெனுவைப்
பொறுத்துக் குறைந்த பக்ஷம் முன்னூறு ரூபாயிலிருந்து இன்னும் மேலே தான்
போகிறது. அதோடு சில குறிப்பிட்ட சமையல் கான்ட்ராக்டர்கள் ரிசப்ஷனுக்கு
வருபவர்களுக்கு உபசாரம் செய்ய எனத் தனியாகச் சில பெண்களை அழைத்து வருவார்கள்.
அவர்கள் மருதாணி எனப்படும் மெஹந்தி இடுவது, வளையல் கொடுப்பது போன்றவற்றைப்
பார்க்கின்றனர்.
இன்னொரு பக்கம் பழங்களைப் பிழிந்து எடுக்கும் ஜூஸ் ஸ்டால்கள் இவர்களின்
கவனிப்பில் இருக்கும்.
குழந்தைகளைக் கவர பஃபூன்கள், அல்லது டெடி, மிக்கி மவுஸ் முகமூடியில் ஆட்கள்,
பஞ்சு மிட்டாய், பீடா ஸ்டால், இது தவிர காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஸ்டால்,
இன்னொரு பக்கம் சாட் ஐட்டங்கள் உள்ள ஸ்டால், சமோசா அல்லது புதினா வடை, பாதாம்,
முந்திரிப் பருப்பு வகைகள் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வருவார்கள்.
பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு ஐடமாக வரும். இந்த வட இந்தியக் கலாசாரம் எப்போ
தமிழ்நாட்டுக்கு வந்ததுனு புரியலை. கிட்டத்தட்டப் பத்துவருடங்கள் வட
இந்தியாவில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் கல்யாணங்களில்
கலந்து கொள்ளும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது எங்களுக்கு.
அதோடு பெண், பிள்ளை உடை அணியும் முறையும் வட இந்தியக் கலாசாரத்தில் தான்.
ஆனால் ஹிந்தியை மட்டும் வெறுப்போம். ஹிந்தி அரக்கினு பட்டமெல்லாம்
கொடுப்போம். சாப்பாட்டில் வட இந்திய சாட் உணவு வகைகளும், மேல்நாட்டு
பிட்சாவும், பர்கரும் தான் முதலிடம் பெறுகிறது. இப்படியான சாட் வகைகளுக்கு
என்றும் ஒரு ஸ்டால் இருக்கும். அங்கே பேல் பூரி, பானி பூரி, வகைகள் இடம்
பெறும். இது எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு அதுக்கப்புறமா வரிசையிலே நின்னு
பெண், மாப்பிள்ளைக்குப் பரிசு கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போனால் சாப்பாடே
இறங்காது. ஏற்கெனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்கும்.
சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை
சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு
சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு
போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.
இந்த சுமங்கலிப் பிரார்த்தனையில் சாப்பிட்டவர்கள் அன்றிரவு விரதமாக இருக்க
வேண்டும் என்பார்கள். பெரும்பாலானவர்கள் இதை இப்போது கடைப்பிடிப்பதில்லை.
கல்யாணப் பெண்டுகளில் அப்படி ஒன்று இல்லை. ஆனால் திருமணங்கள் நடப்பதற்கு
முன்னால் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குறிப்பிட்ட வம்சத்தில்
உள்ள முன்னோர்களில் சுமங்கலியாக இறந்த பெண்கள் மட்டுமில்லாமல், திருமணமே
நடைபெறாமல் இறந்த கன்னிப் பெண்கள், சிறு பெண் குழந்தைகள் என அனைவரின்
பெயர்களையும் தலைமுறை வாரியாக எழுதி வைத்துக் கொண்டு அன்று அவர்கள் அனைவரையும்
நினைவு கூர்ந்து வழிபாடுகள் செய்வது வழக்கம்.
இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும்.
அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச்
சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.
இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள்
வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர்
குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின்
எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது. இந்தப் பூவாடைப்
பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றாலும்
எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது. எண்பதுகள் வரையிலும் நடந்ததை
அறிவேன். இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச்
சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம்
முழங்கால் வரை எரியாது இருக்குமாம். இது எல்லா சுமங்கலியாக இறந்த
பெண்களுக்கும் நடப்பது இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை
எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால்
அந்த பாகம் எரியாமல் இருக்குமாம். அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின்
பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில்
போட்டுக் கொண்டு வருவார்களாம்.
அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில
குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர். இவர்கள்
இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற
ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை
வைத்துக் கொடுப்பார்களாம். அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம்
கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும்
மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம். இது என் சிநேகிதி
சொல்லிக் கேட்டது. அவரின் மாமியார் கர்ப்பப் பை கான்சரில் இறந்தவரின் மடிசார்
எரியவில்லையாம். இது அறுபதுகளின் கடைசியில் நடந்திருக்கிறது. தோழி எனக்குச்
சொன்னது எண்பதுகளில். ஆனால் அவர்கள் அண்ணன், தம்பி மூவர் சேர்ந்து இருக்கையில்
தான் நடத்த வேண்டும் என்பதால் எப்படி நடத்துவார்கள் என்பதை நேரில்
பார்த்ததில்லை. வேறொரு குடும்பம், இவங்க அம்பத்தூரிலேயே இருந்தார்கள். இவங்க
குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையில் ஒன்பது பேர் கட்டாயம் இருக்கணும்.
அதில் ஏழு சுமங்கலிகள், ஒரு விதவை, ஒரு பிரமசாரிப் பையர். இதை அதிசயப்
பொண்டுகள் என்று சொல்கின்றனர். ஆனால் சாப்பாடு விஷயத்தில் சமரசம் செய்து
கொள்கின்றனர்.
நான் பார்த்த திருமணத்தில் திருமணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் இவர்கள்
ஒன்பது பேரையும் முதலில் வரிசையாக உட்கார்த்தி வைத்து சமையல்காரர்கள் சமைத்த
சாப்ப்பாடையே போட்டுச் சாப்பிடச் சொல்லிப் பின்னர் அனைவருக்கும் தாம்பூலம்
கொடுத்தார்கள். இதே போல் குஜராத்தியர் ஒருத்தரின் சதாபிஷேஹத்திலும் நடந்தது.
இதற்கு அவர்கள் கூறிய கர்ணபரம்பரைக் கதை. ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய்
ஒருத்தி தன் ஏழு மருமகள்களையும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடாமல்
கண்டிப்பாக இருந்தாளாம். அவள் ஒருநாள் வெளியே சென்றிருக்கையில் மருமகள்
அனைவரும் கூடி மாமியாருக்குத் தெரியாமல் நல்ல சாப்பாடு சமைத்துச் சாப்பிடும்
வேளையில் மாமியார் வந்துவிட என்ன செய்வது எனப் புரியாமல் மருமகள்கள் பூஜை
அறையில் அம்பிகையைப் பிரார்த்திக்க மாமியார் கண்ணெதிரே ஏழு பேரும் அம்மனோடு
ஐக்கியம் அடைந்ததார்கள் எனச் சொல்லப் படுகிறது. ஆகவே இதற்கு ஆசாரம் பார்க்க
வேண்டாம் என்றும் நல்ல சாப்பாடு சாப்பிட நினைத்த மருமகள்களை நினைத்துக்
கல்யாணச் சாப்பாடைப் போடுகிறார்கள் என்றும் கூறினார்கள். மேலும் அவர்களில்
எவரும் சாஸ்திரோக்தமாக அல்லது சம்பிரதாயமாக மடிசார் வைத்துக் கட்டிக்
கொள்ளவில்லை. விதவையை அழைப்பது அந்த மாமியாரை நினைத்து என நினைக்கிறேன்.
பிரமசாரி எதற்கு என்பது அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில்
ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள். தனியாகத் தான்
வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ
அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும். ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக
இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள்.
ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது. சுமங்கலிப்
பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில்
வெல்லமே சேர்ப்பார்கள். சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும்
முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு
போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள். கத்தரிக்காய், வாழைக்காய்,
அவரைக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு,
கொத்தவரை, பறங்கி, பூஷணி போன்ற நாட்டுக்காய்களே சேர்க்கப்படும். பாகற்காய்
கசப்புச் சுவை என்பதால் சுமங்கலிப் பிரார்த்தனையில் சேர்ப்பதில்லை. வாழை, மா,
பலா போன்ற முக்கனிகளும் அந்த அந்தப் பருவத்தை ஒட்டிச் சேர்ப்பதுண்டு.
Sunday, July 21, 2013
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு. அடுத்து இதுக்குப் புடைவை
எடுக்க வேண்டும். இதற்கும் நாள் பார்த்துத் தான் எடுப்பார்கள். அநேகமாய்க்
கல்யாண ஜவுளி எடுக்கும் நல்ல நாளிலேயே நல்ல நேரத்தில் சுமங்கலிப்
பிரார்த்தனைப் புடைவயும் எடுத்து விடுவார்கள். பிராமணர்களில் ஒன்பது கஜம்
புடைவை தான் எடுக்க வேண்டும். இதற்கு அரக்கு, மஞ்சள், பச்சை,சிவப்பு, மெஜந்தா,
ரோஜா நிறம் போன்ற கறுப்புக் கலக்காத வண்ணங்களிலேயே எடுப்பார்கள். கூடவே
ரவிக்கைத் துணி எடுத்தாலும், புடைவையோடு சேர்த்து ரவிக்கைத் துணியை நனைத்து
வைப்பதில்லை. ரவிக்கைத் துணியைத் தனியாகத் தான் கொடுப்பார்கள். பொதுவாக
வீட்டில் பிறந்த பெண்களில் வயது முதிர்ந்த சுமங்கலியான அத்தைக்குத் தான் இது
போய்ச் சேரும். கல்யாணப் பிள்ளையின் அல்லது கல்யாணப் பெண்ணின் இந்த அத்தையைத்
தவிர வேறு மூத்த சகோதரிகள் திருமணம் ஆகி இருந்தாலும் அவர்கள் மணையில்
சுமங்கலிகளுள் ஒருவராக அழைக்கப்படுவார். புடைவைக்கு எதிரே போடும் இலையைத்
தவிர்த்த முதலாம் இலையில் அத்தையை உட்கார வைப்பார்கள். இரண்டாம் இலையில் வயது
வாரியாக வீட்டில் பிறந்த மற்றப் பெண்களை உட்கார வைப்பார்கள். வீட்டில்
பெண்கள் இல்லை எனில் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்மணிகளை அழைப்பது
உண்டு. ஆனால் புடைவை கொடுப்பது வீட்டுப் பெண்ணுக்கே அநேகமாய் கொடுப்பார்கள்.
அப்படி இல்லாமல் சிலர் அந்நியப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பதாய்ப்
பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்நியப் பெண்ணுக்குக்
கொடுக்கலாம்.
இதில் தஞ்சைப் பக்கம் ஒரே ஒரு புடைவை தான். புடைவை இலையும் ஒன்றே. ஆனால்
மதுரைப் பக்கம் இரண்டு இலை போடுவார்கள். அத்தைக்குப் புடைவை எடுத்திருக்கிற
மாதிரி வீட்டில் பிறந்த அடுத்த தலைமுறைப் பெண்ணும் கல்யாணமாகி இருந்தால்
அவளுக்கும் புடைவை எடுத்திருப்பார்கள். பெரியப்பா பெண், சித்தப்பா பெண்
போன்றோருக்கும் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. கல்யாணம் ஆகாமல் இறந்த
பெண்ணை நினைத்து ஆறு கஜம் புடைவையும், கன்யாக் குழந்தைக்குப் பாவாடை,
சட்டையும் எடுப்பதும் உண்டு. திருநெல்வேலிக்காரர்கள் வீட்டில் பிறந்த
பெண்களுக்குப் புடைவை வைத்துக் கொடுப்பதில்லை. வீட்டின் மூத்த மாட்டுப்
பெண்ணிற்கே அந்தப் புடைவை போய்ச் சேரும். 2, 3 மருமகள்கள் இருந்தால்
அவர்களுக்கும் புடைவை வாங்கி நனைக்காமல் வழிபாட்டில் வைத்து எடுத்துக்
கொள்வார்கள். புதிய மருமகள் கல்யாணம் ஆகி வந்திருந்தால் அவளுக்கு அந்தப்
புடைவையைக் கொடுப்பதும் உண்டு. மேலும் திருநெல்வேலிக்காரர்களில் சிலர்
பெண்ணின் கல்யாணம் என்றால் பெண் கல்யாணத்திற்கு முன்னாலும், பிள்ளையின்
கல்யாணம் என்றால் மருமகள் வந்த பின்னரும் சுமங்கலிப் பிரார்த்தனை
நடத்துவார்கள். மதுரை, தஞ்சைப் பக்கங்களில் இரண்டு கல்யாணங்களிலும்
முன்னாடியே நடத்திவிடுவார்கள். தவிர்க்க முடியவில்லை எனில் தான் பின்னால்
நடக்கும். அப்போது சுமங்கலிப் பிரார்த்தனைக்காக ஒரு ரூபாய்க் காசை முடிந்து
வைப்பது வழக்கம்.
காலை எழுந்து குளித்துவிட்டு, கால்படி அரிசி, ஒரு ரூபாய்க் காசு, ஒரு சின்ன
உருண்டை வெல்லம், மட்டைத் தேங்காய் எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துவிட்டு, ஒரு
வெள்ளைத் துணியை மஞ்சள் கலந்த நீரில் நனைத்துப் பிழிந்து சற்றே, உலர்த்தி
அதில் ஒரு ரூபாய்க் காசை முடிந்து கட்டி அம்மன் படத்தருகே வைப்பார்கள். இது
சுமங்கலிப் பிரார்த்தனை இன்னும் நடக்கவில்லை; நிறைவேற்ற வேண்டும் என்பதை
நினைவு கூர வைக்கும். சுமங்கலிப் பிரார்த்தனையின் போது அந்தக் காசை
எடுத்துபுடைவைக் கலத்தோடு வைப்பார்கள். பிள்ளையாருக்கு வைப்பது எதற்கு எனில்
எந்தக் காரியம் செய்தாலும் முதல் வழிபாடு அவருக்கே என்பது தான். அரிசி,
வெல்லம் வைக்காமல் வெறும் ஒரு ரூபாய்க் காசைப் பிள்ளையாரிடம் வைத்துவிட்டும்
முடிந்து வைப்பது உண்டு. அவரவர் செளகரியம்.
நேற்றைய பதிவில் பாலக்காட்டுத் தமிழர்களிடையே சுமங்கலிப் பிரார்த்தனை அவ்வளவு
வழக்கம் இல்லை என்று சொன்னதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் நண்பர் திரு
எஸ்.நீலகண்டன். குமரி மாவட்டத்துக்காரரான இவர் பாலக்காட்டுத் தமிழர்கள்
தஞ்சை, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்
தான். ஆகவே அவர்களிலும் சுமங்கலிப் பிரார்த்தனை நிச்சயம் உண்டு என்றும் அவர்
வீட்டிலேயே அவர் பாட்டி இருந்த காலத்தில் பூவாடைப் பொண்டுகள் எனப் பூவாடைப்
பானை, "பாவுள்ளில்" வைத்திருந்ததாகவும் அதில் ஆறு பெண்களின் பெயர்கள்
இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அதை யாரும் சாதாரணமாகத் தொடக்கூடாது என்ற
ஆசாரக் கட்டுப்பாடுகள் இருந்ததையும் நினைவு கூர்கிறார். அதிசயப்பொண்டுகள்
பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாயும் நேரில் பார்த்ததாகவும் கூறுகிறார்.
மேலும் பொண்டுகள் இலையில் உட்கார்ந்து சாப்பிடுவதும் நான் ஏற்கெனவே இந்தப்
பதிவில் கூறி இருப்பது போல் சில வீடுகளில் வீட்டுப் பெண்கள் தான்
உட்காருவார்கள் எனவும் சில வீடுகளில் அது இல்லை என்பதையும் தெரிவிக்கிறார்.
புடைவை எடுத்தாச்சு. மற்றப் பெண்களுக்குக் கொடுக்க ரவிக்கைத்துணி, வளையல்கள்,
சீப்பு, கண்ணாடி, (முகம் பார்க்குமாறு இருத்தல் நலம்)மருதாணி, மஞ்சள் கிழங்கு
அல்லது மஞ்சள் பொடி பாக்கெட்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், இயன்றால்
தேங்காய் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இதை ஓலைப்
பெட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். ரவிக்கைத் துணியோடு ஓலைப்பெட்டியை
வைத்துக் கொடுப்பார்கள். சிலர் முறத்தில் வைத்துக்கொடுப்பார்கள். இப்போதைய
ப்ளாஸ்டிக் யுகத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் தான். எல்லாம் தயாராக முன் கூட்டியே
வாங்கி வைத்து இருக்கணும். அடுத்து எண்ணெய் கொடுப்பது. சுமங்கலிகளை
வீட்டுக்கு அழைத்து சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை எண்ணெய் கொடுப்பதே
வழக்கம். ஒரு சிலர் இப்போதெல்லாம் அவரவர் வீட்டிலேயே குளித்துவிட்டு
வருவதாய்ச் சொல்வதால் வீடுகளுக்குச் சென்று எண்ணெய் கொடுப்பார்கள். எண்ணெய்,
சீயக்காய், மஞ்சள் தூள் கொடுப்பார்கள். எல்லாம் கொடுத்துவிட்டுக் குங்குமம்
கொடுத்து அழைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கும் வீட்டிலேயே
இருந்தால் பெண்களை அமர வைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்து எண்ணெய்
கொடுப்பார்கள்.ஆனால் அதற்கு முன்னால் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.
இவ்வளவு தேவையா என்பவர்களுக்கு! இந்தக் காலத்தில் யாருக்கும் தாம்பூலம்
கொடுக்கையில் என்ன வைப்பது என்றே தெரியவில்லை. மேலும் ப்ளாஸ்டிக் பொருட்களைத்
தவிர்ப்பது நலம் என்பதற்காகவும் சொல்லி இருக்கேன். அதற்கு ஓலைப் பெட்டி
கொடுக்கலாம். எவர்சில்வருக்குப் பித்தளை பரவாயில்லை. முன்பெல்லாம் எவர்சில்வரை
இரும்போடு சேர்த்தி எனச் சொல்வார்கள். இப்போது ப்ளாஸ்டிக்கும், எவர்சில்வரும்
தான்! அதோடு பலருக்கும் அவரவர் குடும்ப வழக்கம் தெரியறதில்லை. எந்த ஊரைச்
சேர்ந்தவங்கனு தெரிஞ்சால் அந்த வழக்கத்தையும் பின்பற்றலாம். என்ன செய்யணும்,
எப்படிச் சமைக்கணும் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்டிருக்கின்றனர்.
எல்லாருக்காகவுமே
பொண்டுகள் எல்லாம் வந்தாச்சு! இலையைப் போடுங்க!
சாப்பாடு மெனு ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஸ்ரீராம் கவனிக்கவில்லை
போலிருக்கு. அதோடு எல்லார் வீட்டிலும் திரட்டுப் பால், போளி பண்ண
மாட்டார்கள். திரு வைகோ அவர்கள் போளியும், திரட்டுப் பாலும் கேட்கிறார்.
இன்னும் கல்யாணத்துக்கே திரட்டுப்பால் பண்ணியாகவில்லை. :)))))
சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கொடுக்கவென
வாங்கிய புடைவையை நனைக்க வேண்டும். அதுக்கு முன்னாடி புடைவையைக் கட்டிக்
கொண்டு ஒரு பெண் அமர்ந்திருப்பது போல வைக்க வேண்டும். இதோ இப்படி. ஒன்பது
கஜம் புடைவையை அதை எப்படிக் கட்டிப்பாங்களோ அப்படிக் கொசுவித் தலைப்பைச்
சுத்திக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மற்றப் புடவைகள் அநேகமாய்ப் புதிதாகவே
கொடுப்பார்கள். ஆகவே அவற்றை வைக்க வேண்டாம். என் பிறந்த வீட்டில் ஆறு கஜம்
புடைவையும் , அதே போல் பாவாடை, சட்டையும் நனைக்க வைப்பதுண்டு என்பதால், அவற்றை
இங்கே காணலாம்.
எண்ணெய் கொடுக்கும் முன்னர் முதலில் அந்தப் புடைவையில் சந்தனம், குங்குமம்
இட்டு, மூன்று சொட்டு எண்ணெய் தெளித்து, சீயக்காய் கரைத்துத் தெளித்து,
மஞ்சளும் அதே போல் தெளிக்க வேண்டும். இது நம் வீட்டில் மறைந்த சுமங்கலியே
நேரில் வந்து வாங்கிக் கொண்டதாக ஐதீகம். அதன் பின்னரே அந்தப் புடவையை நனைத்து
உலர்த்துவார்கள். அதே போல் ஆறு கஜம் புடைவை, பாவாடை, சட்டைக்கும் செய்து
நனைக்க வேண்டும். இன்றைய தினம் முதலில் சாப்பிடுவது பெண்களே. :)) பெண்களுக்கே
முன்னுரிமை. கிழக்கு, மேற்காகக் கோலங்கள் போட்டு இலை போட வேண்டும். புடைவைக்
கலத்தின் முன்னர் அவரவர் வீட்டு வழக்கம்போல் ஒரு இலையோ அல்லது இரண்டு இலைகளோ
போடவேண்டும். மற்றப் பெண்களுக்கும் வரிசைக்கிரமமாக இலை போட்டுவிட்டுப்
பெண்களுக்கு மஞ்சள் கொடுத்துக் கால் அலம்பி வரச் சொல்ல வேண்டும். வரும்
பெண்களுக்குப் பூ, சந்தனம், குங்குமம் கொடுப்பார்கள். சில வீடுகளில் பொண்டுகள்
இலை போட்டுப் பரிமாறும்வரையிலும் பெண்கள் ஒரு தனி அறையில் இருப்பார்கள்.
பின்னர் அவரவர் குடும்பத்தில் மறைந்த சுமங்கலிகளின் பெயரை வருடம், வயது
வாரியாக எழுதி வைத்து வாசித்துவிட்டு அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு
ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டு கையைத் தட்டி அழைப்பார்கள்.
ஆனால் பொதுவாக இலை போட்டுப் பரிமாறிவிட்டே பெயர்களைச் சொல்லும் வழக்கம்
இருந்து வருகிறது. பரிமாறுகையில் முதலில் புடைவைக்கலத்தில் பரிமாற வேண்டும்.
பின்னர் வரிசையாக வரும் எந்த உணவாக இருந்தாலும் புடைவைக் கலத்துக்குப்
பரிமாறியே பின்னர் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். அதோடு முடிக்கையில்
வடக்குப் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபரிடம் முடிக்க வேண்டும். தெற்குப்
பக்கம் முடிப்பது ஏற்றுக் கொள்வதில்லை. பின்னர் வீட்டின் மூத்த மருமகள் கையில்
நீரை எடுத்துக் கொண்டு புடைவைக் கலத்தில் ஆரம்பித்துச் சுற்றிக் கொண்டு வந்து
பின்னர் புடைவைக் கலத்திலேயே முடிக்க வேண்டும். வீட்டின் ஆண்கள், கல்யாணப்
பிள்ளை ஆகியோர் நமஸ்கரிப்பார்கள். கல்யாணப் பெண் வீட்டில் நடக்கையில் அந்தப்
பெண்ணும் ஒரு கன்யாப் பெண்ணாக அமர்ந்திருப்பாள். அதன் பின்னரே சாப்பிட
ஆரம்பிக்க வேண்டும். புடைவைக் கலத்தில் இடப்படும் உணவைப் பின்னர் சுமங்கலிப்
பிரார்த்தனை செய்யும் வீட்டின் மருமகள்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டு
பகிர்ந்து உண்பார்கள். சாப்பிட்டு முடிந்ததும், வித விதமான உணவுகளைச்
சாப்பிட்டதற்கு செரிமானத்துக்காகச் சுக்கு, வெல்லம் சேர்த்துப் பொடி செய்து
வைத்திருப்பார்கள் அதைக் கொடுப்பார்கள். பின்னர் பானகம், நீர் மோர்
கொடுப்பார்கள். நேரம் நல்ல நேரமாக இருந்தால் அப்போதே வெற்றிலை, பாக்கு
வைத்துக் கொடுத்துவிடுவார்கள். இல்லை எனில் நல்ல நேரம் வரும் மட்டும்
தாமதித்துப் பின்னர் கொடுப்பார்கள்.
புடைவை கொடுத்ததும் அதைக் கட்டிக் கொண்டு வந்த பின்னர் அனைவருமே அந்தப்
பெண்மணியை வயது வித்தியாசம் இல்லாமல் நமஸ்கரிப்பார்கள். அன்றைய தினம் அந்தப்
பெண்மணி தான் அந்த வீட்டின் வயதான சுமங்கலியாகக் கருதப்படுவாள். மற்றப்
பெண்களுக்கும் வாங்கிய ரவிக்கைத்துணியோடு மஞ்சள், வெற்றிலை, பாக்கு,
குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, மருதாணி போன்றவற்றோடு அவர்களால் இயன்ற
பணமும் வைப்பார்கள். அது ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை இருக்கும்.
அன்றிரவு பொண்டுகளில் சாப்பிட்ட அனைவரும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளத் தடை
இல்லை. (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்) ஒரு சில கல்யாண வீடுகளில் மறுநாளே
சமாராதனை செய்வார்கள். சிலர் சனிக்கிழமை, வியாழக்கிழமை என நாள் பார்த்துச்
செய்வார்கள். பொதுவாகக் கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வந்தால் சுமங்கலிப்
பிரார்த்தனைக்கு மறுநாளே செய்துவிடலாம்.
தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ?
தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு
பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர்
வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற
நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது
எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.//
ஜிஎம்பி சார் கேட்டிருக்கும் கேள்வி இது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு
மாவட்டத்திலே திருமணம் செய்து கொண்டாலே குழப்பம் ஏற்படுமே என்று சந்தேகம்
கொள்கிறார். முன்னெல்லாம் அருகிலுள்ள கிராமங்களிலேயே சம்பந்தம் செய்து
கொள்வார்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் மிக அபூர்வமாக
வேறு மாவட்டங்களிலும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து
வந்திருக்கிறது. என்னோட பெரியம்மா (அம்மாவின் அக்கா) தஞ்சை
ஜில்லாக்காரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதற்கும் முன்னரே
திருநெல்வேலிக்காரர்கள் பெண்ணை என்னோட பெரியப்பா ஒருத்தர் (அப்பாவின் அண்ணா)
திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதிலே எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும்
என்பதற்கான கேள்வியே எழாது. பெண் எந்த ஊர்க்காரர்களின் மருமகளாகப் போகின்றாளோ
அந்த ஊரின் , அந்த வீட்டின் வழக்கங்களும், நடைமுறைகளுமே அவள் வாழ்க்கையில்
கடைப்பிடிக்கப்படும்; கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த
வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம். தப்பில்லை. ஆனால்
முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம்
போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அது தான்
முறை. நான் பிறந்தது, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை. திருமணம் ஆகிப் போனதோ
பழைய தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் அருகிலுள்ள கிராமம். பட்டிக்காடு என்றால்
பட்டிக்காடு. மின்சாரமே வரலை அப்போது. கை விளக்குகள் தான். விறகு அடுப்பு
தான். அதுவும் தென்னை ஓலை, மட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். ஏனெனில் அது
தான் சுலபமாகக் கிடைக்கும். விறகுகள் இருந்தாலும் அதிகம் தென்னை மட்டைகள்
தான். இதுதான் இப்படி என்றால் பேச்சிலும் நிறையவே மாறுதல். பள்ளிக்கூடத்தை,
"பள்டம்" என்று சொல்வார்கள். கற்றுக்கொள்கிறேன், என்பதை, "கத்திக்கறேன்"
என்பார்கள். இதெல்லாம் என்னனு புரியவே எனக்கு ஆறு மாசமாச்சு. ஆனால்
இதெல்லாத்தையும் விடப் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதுக்காகவெல்லாம்
பயந்தால் முடியுமா?
முக்கியமான சமயங்களில் புக்ககத்துப் பழக்கத்தையே கடைப்பிடிப்பேன்.
கடைப்பிடிக்கிறேன். இப்போது எனக்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டு
பக்கத்துப் பழக்கமும் நன்றாகவே தெரியும். ஆனால் இரண்டுக்கும் எக்கச்சக்கமாக
வித்தியாசம். இதுக்காக யார் சமரசம் பண்ணிக்கிறது என்ற போட்டியெல்லாம்
நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. முக்கியமான நேரங்களில் புக்ககத்து
வழக்கப்படி செய்துவிட்டால் அப்புறம் நான் இருக்கிறபடியே இருக்கலாம் என்பதே
என் கருத்து. குல தெய்வ ஆராதனை, சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை
போன்றவற்றில் என் பிறந்த வீட்டு வழக்கத்தைக் கொண்டுவர மாட்டேன்.
இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என்றெல்லாம்
திருமணம் செய்து கொள்ளும் காலமாகி விட்டது. உலகம் மிகக் குறுகி வருகிறது.
கொஞ்சம் ஈகோவைக் கைவிட்டால் போதும். எல்லாம் நம் வசமே.
மற்றபடி சுமங்கலிப் பிரார்த்தனை தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது
எனப் புரியவில்லை. எத்தனையோ தலைவர்களின் நினைவு நாட்கள், மதத் தலைவர்கள்
நினைவு தினங்கள், அரசியல்வாதிகளின் நினைவு தினங்கள், சினிமா நக்ஷத்திரங்களின்
நினைவு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம்
முழுதும். அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் பிறந்து மறைந்த அல்லது நம்
குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு
கூர்தல் எந்த விதத்திலும் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வளவு விமரிசையாகப்
பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு
பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம். நமக்கு இஷ்டமில்லை
எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக்
கொடுக்கலாம். துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.
சுமங்கலிப் பிரார்த்தனையில் புடைவை வைக்கும் கலத்தில் வீட்டில் உள்ள அனைவரின்
நகைகளும் போட்டு அலங்கரிப்பதோடு திருமணப் பெண் வீட்டில் என்றால் பெண்ணின்
நகைகளும், பிள்ளை வீட்டில் என்றால் கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கி இருந்தால்
அதுவும், கூறைப்புடைவையும் வழிபாட்டில் வைக்கப்படும். இது எல்லாருக்கும்
வழக்கம் இல்லை. மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே வழக்கமாக இருக்கிறது. ஆனால்
வீட்டினரின் நகைகளைப் போட்டு அலங்கரிப்பது உண்டு. மேலும் தஞ்சை ஜில்லாவில்
அத்தைக்குப் புடைவை கொடுத்த பின்னர் அந்தப் புடைவையை அவர் கட்டிக் கொண்டு
வந்து அனைவரும் நமஸ்கரித்த பின்னர் புடைவையை அவரிடம் அன்றே கொடுப்பதில்லை.
அவர் புடைவையை மாற்றிய பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனையில் வழிபட்ட
புடைவையைக் கொடியில் போடுவார்கள். அன்றிரவு முழுதும் அந்தப் புடைவை கொடியில்
இருக்கும். குடும்பத்துச் சுமங்கலிகள் அனைவரும் அன்றிரவு வந்து அந்தப்
புடைவையை எடுத்துக் கட்டிக்கொள்வதாக ஐதீகம்.
அடுத்து சமாராதனை. பொதுவாக வெங்கடாசலபதி சமாராதனையே நடைபெறும். என்றாலும்
மிகச் சிலர் வீடுகளில் அவரவர் குல தெய்வ ஆராதனையையே சமாராதனையாக
நடத்துவார்கள். இது சனிக்கிழமைகளிலேயே நடைபெறும். என்றாலும் பல சமயங்களிலும்
கல்யாணம் நடைபெறப் போகும் கிழமையைப் பொறுத்து திங்கள், புதன், வியாழன் போன்ற
கிழமைகளில் வைப்பார்கள். சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்பவர்கள்
கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்னர் வரும் சனிக்கிழமையில்
செய்துவிடுவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு சமாராதனை நடைபெறும். சாப்பாடு வருபவர்
எல்லாருக்கும் போடுவார்கள். சமாராதனைச் சாப்பாடு என்றே விசேஷமாகச் சொல்லப்
படும்.
சாப்பாடு மெனு: சர்க்கரைப் பொங்கல்(இது தான் மிக முக்கியம்) தயிர்ப்பச்சடி,
இனிப்புப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது பொடி போட்ட கறி, அவரைக்காய்,
முட்டைக்கோஸ் போன்ற காய்களில் தேங்காய் போட்ட கறி ஒன்று, பருப்பு உசிலி பீன்ஸ்
அல்லது கொத்தவரையில். அவியல். அவியல் இல்லை எனில் கத்தரிக்காய்ப் பிட்லை,
மோர்க்குழம்பு இருக்கும். ஒரு கலந்த சாதம், சனிக்கிழமை எனில் எள்ளுச் சாதம்
தான் இருக்கும். அப்பளம் வீட்டில் செய்தது எனில் சேர்ப்பார்கள். சேனை அல்லது
உருளை வறுவல், உளுந்து வடை, ஊறுகாய் அன்று புதிதாய்ப் போட்டது, அவியல்
என்றால் சாம்பார். பிட்லை என்றால் மோர்க்குழம்பு எனச் செய்வார்கள். ரசம்,
மோர். அன்று காலையே வழிபாடு நடைபெறும் இடத்தில் அல்லது பூஜை அறையில் என்றால்
அங்கே மாக்கோலம் போட்டு படங்களைத் துடைத்துப்புஷ்பங்கள் சார்த்தி அலங்காரம்
செய்வார்கள். பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி,
சந்தனம், உதிரிப் பூக்கள், மாலை, துளசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்
போன்றவை தயார் செய்வார்கள்.
சில வீடுகளில் வெங்கடாசலபதிக்கும் மாவிளக்குப் போடுவதுண்டு. அவர்கள் மாவு
இடித்து, வெல்லம், ஏலக்காய் கலந்து தயார் செய்து வைப்பார்கள். சாஸ்திரிகள்
தான் வந்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது. அதிலும் முன்னெல்லாம் நான்கு
அல்லது ஐந்து வைதீகர்கள் வந்து சங்கல்பம் சொல்லி, வீட்டினரின் கோத்திரம்,
பெயர், நக்ஷத்திரங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு அனைவரின் பெயரையும் சொல்லிச்
சங்கல்பம் செய்து வைத்து, சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் சொல்லிப் பூக்களாலும்,
துளசியாலும் அர்ச்சனை செய்வார்கள். இப்போது யாரும் வருவதில்லை. வந்தாலும்
வீட்டிலேயே சமைத்தாலும் வைதீகர்கள் சாப்பிடுவதில்லை. ஆகவே வீட்டு எஜமானரே
சஹஸ்ரநாமம் படித்துப்பூஜை செய்து, அக்கம்பக்கத்து நண்பர்கள், உறவினர்கள்
இவர்களில் ஐந்து ஆண்களை அல்லது நான்கு ஆண்களை வைதீகர்களாக மானசீகமாக நினைத்து
வேண்டிக் கொண்டு முதல் பந்தியில் அமர வைப்பார்கள். இதற்கும் பொண்டுகள்
முன்னாடி வைதீகர்களோடு சேர்ந்து சாப்பிட அமர வைப்பது உண்டு. அதற்கு அலர்மேலு
மங்காப் பொண்டுகள் என்று பெயர். சுமங்கலியை எண்ணெய்தேய்த்துக் குளிக்கச்
செய்து, மடிசார் கட்டும் வழக்கம் இருந்தால் மடிசாருடன் பூஜை செய்து
கொண்டிருக்கும் சுவாமி படம் இருக்கும் இடம்/அல்லது பூஜை அறையில்
வலப்பக்கமாகக் கோலம் போட்டு இலை போடுவார்கள். அன்று அந்தப் பெண்மணி அலர்மேல்
மங்கையாக அவதாரம் எடுத்திருப்பார். வைதீகர்களோடு சேர்ந்து அந்தப்
பெண்மணிக்கும் சாப்பாடு போடுவார்கள்.
சாப்பாடு முடிந்து வைதீகர்கள் ஆசீர்வாதம் பண்ணி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு,
பழம், தக்ஷணை கொடுத்து முடிந்ததுமே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கூடவே
அலர்மேல் மங்காவுக்கும் அதே போல் வெற்றிலை, பாக்கு, தக்ஷணை உண்டு. இது எல்லாம்
முடிஞ்சு அநேகமாய் மறுநாளே சத்திரத்துக்கு அல்லது கல்யாணம் நடக்கும்
வீட்டுக்குப்போகிறாப் போல் அமையும். ஆகவே நாமும் அடுத்துப் போகப் போவது
கல்யாணச் சத்திரத்துக்கே.
பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
பொதுவாகச் சத்திரம்/மண்டபம் பெண் வீட்டுக்கு அருகே தான் பார்ப்பாங்க. பிள்ளை
வீட்டுக்காரங்க வெளியூர் எனில் அவர்களே கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில்
சத்திரம் வந்து சேரும்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். இதைச் சிலர்
பெண் வீட்டினரின் தலையிலும் கட்டுவதுண்டு. பிள்ளை வீட்டினர் எத்தனை பேரோ
அத்தனை பேருக்கும் கல்யாணத்திற்கு வந்து, திரும்பிப் போக ஆகும் செலவைப் பெண்
வீட்டினர் ஏற்பது உண்டு. இந்தச் செலவெல்லாம் இப்போது இல்லை என்றாலும் மிக
அரிதாகப் பார்க்கவும் முடிகிறது. எங்கள் நண்பர் ஒருத்தரின் பெண்ணிற்கு ஒரு
பிள்ளையைப் பார்த்தார்கள். ஜாதகம் பொருந்தி, பிள்ளை, பெண்ணுக்கும் பிடித்துப்
போய்விட்டது. பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன் என்னவென்றால் பிள்ளை இப்போது
அமெரிக்கா திரும்பிவிடுவான். பின்னால் கல்யாணத்திற்குத் தான் வருவான். ஆகவே
இப்போது திரும்பும் செலவு, மீண்டும் கல்யாணத்திற்கு வந்துவிட்டுப் பெண்ணையும்
அழைத்துக் கொண்டு திரும்பும் செலவு ஆகியவற்றோடு பெண்ணிற்கு விசா எடுக்கும்
செலவு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன். மூன்று
பெண்களைப் பெற்ற அந்தத் தந்தை வேறு வழி இல்லாமல் அந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக்
கொண்டார். பிள்ளைக்கு மூன்று வழி பயணச் செலவு, பெண்ணிற்குப் பிள்ளையோடு
செல்லும்போது ஏற்படும் செலவு, விசாச் செலவு, கல்யாணச் செலவு என
எக்க்கச்சக்கமாகச் செலவு ஆனது. வேண்டாம்னு வேறே வரன் பார்த்திருக்கலாமேனு
கேட்டதுக்கு இப்போவே பெண்ணின் வயது 27 ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்கக்
கூடாதுனு ஒத்துண்டோம்னு சொன்னார். இது சில வருடங்கள் முன்னர் நடந்தது.
பெண் வீட்டினர் செல்வதற்கு முன்னர் சமையல்காரர்கள் அங்கே சென்றுவிடுவார்கள்.
பெண் வீட்டில் இருந்து விஷயம் தெரிந்த யாரேனும் அங்கே சென்று
சமையல்காரர்களுக்கு மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.
சமையல்காரர்களும் அவர்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று
சொல்லுவார்கள். காடரிங் கல்யாணம் இல்லை எனில் சாமான்கள், காய்கறிகள்,
பழங்கள், மற்றப் பொருட்கள் வாங்கிச் சேமித்து வைத்திருக்கும் அறையை முக்கியமான
நம்பகமான ஆள் ஒருத்தரை முன்னாலேயே போய் சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச்
சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள். அந்த அறையின் சாவி அவரையும்
இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம்
கொடுக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை
எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள். ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல்
உடைக்க வேண்டி ஆச்சு.
கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் தான் சத்திரம்/மண்டபம் செல்ல நல்ல நேரம்
பார்த்திருப்பார்கள். சத்திரம் செல்லும் முன்னர் இரு வீட்டினரும் அரிசியை ஊற
வைத்து அரைத்து மாக்கோலம் போட்டு வைப்பார்கள். பிள்ளை வீட்டினர் உள்ளூராக
இருந்தால் அவர்கள் சத்திரம் வரும் முன்னர் பெண் வீட்டினர் அங்கே சென்றுவிட
வேண்டும். பிள்ளை வீட்டினர் வெளியூராக இருந்தால் அதிகாலையில் வருகிறாப்போல்
ஏற்பாடுகள் பண்ணி இருப்பாங்க. ஆகவே பெண் வீட்டினர் முதல்நாள் இரவே
போய்விடலாம். எங்க பொண்ணுக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம். வியாழக்கிழமை அதிகாலை
5-15 மணிக்கு நல்ல நேரம் பார்த்திருந்தோம். பிள்ளை வீட்டினர் மும்பையாக
இருந்தாலும் இரண்டு நாட்கள் முன்னரே வந்து மாம்பலத்தில் தங்கி இருந்தனர்.
அவர்களை ஏழரைக்கு எமகண்டத்துக்குப் பின்னர் போய் அழைத்து வந்தோம். எங்க
பையருக்கு ஞாயிறன்று கல்யாணம். ஆனால் அந்த வருடம் எக்கச்சக்கமாக அடித்த
புயலினாலும், மறுநாள் சனிக்கிழமை அன்று புதியதொரு புயல் நாமகரணம்
செய்யப்பட்டிருந்ததாலும் வெள்ளி இரவே வந்திருந்த உறவினரோடு சத்திரத்துக்குப்
போய்விட்டோம். பெண் வீட்டினரிடமும் தெரிவித்துவிட்டோம். அவர்களும்
ஒத்துக்கொண்டனர். மறுநாள் தான் தெரிந்தது அது எத்தனை நல்லது என்று. மறுநாள்
ஏதோ திடீர் பந்த் நடக்க கல்யாணத்துக்கு வரவேண்டிய மற்ற உறவினர்கள் பட்ட கஷ்டம்
கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதோடு மழை வேறு.
பொதுவாகக் கல்யாணம் உத்தராயணத்திலேயே வைப்பார்கள். தை மாதத்தில் ஆரம்பித்து,
ஆனி மாதத்தோடு கல்யாணங்கள் முடிந்துவிடும். பின்னர் ஆவணி பரவாயில்லை என
ஆரம்பித்து இப்போதுக் கடந்த பத்து வருடங்களாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும்
திருமணங்கள் நடக்கின்றன. இந்த மாதத் திருமணங்களின் நாயகன், நாயகியர்
பெரும்பாலும் வெளிநாட்டு வாசிகளாகவே இருப்பார்கள். என்றாலும் இப்போது
உள்நாட்டினரும் செய்கின்றனர். வட மாநிலங்களிலும் இந்தக்கலாசாரம் பரவி உள்ளது.
ஆச்சு, நம்ம விஷயத்துக்கு வருவோம். சத்திரத்துக்குப் போய்ச் சேருவோம், பெண்
வீட்டினரோ, பிள்ளை வீட்டினரோ சத்திரம் கிளம்பும் முன்னர் யாத்ரா தானம் என்ற
ஒன்றைப் பண்ண வேண்டும். பொதுவாகக் கல்யாணப் பிள்ளை மட்டுமே செய்யும் இது இரு
வீட்டினரும் செய்யலாம். பெண்ணின் சார்பில் பெண்ணின் தந்தை செய்யலாம்.
கல்யாணம் பண்ணி வைக்கக் கூடவே வரும் சாஸ்திரிகளே இதைப் பண்ணி வைப்பார்.
சாஸ்திரிகள் இப்போதெல்லாம் கூட வருவது என்பது பிள்ளை வீட்டினர்
வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே கூடவே அழைத்துவருவதோடு இருக்கிறது.
உள்ளூராக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு சடங்குக்கும் அந்த நேரத்துக்குத் தான்
வருகின்றனர்.
[image: Inline image 1]
யாத்ராதானம் உள்ளூராகவே இருந்தாலும் சுப காரியங்கள் தொடங்கும் முன்னர் வேதம்
படித்தவர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு ஆரம்பிப்பது மிக நல்லது. பெண்
வீட்டுக்காரங்க முன்னால் போய் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று
சொன்னேன். இது பெண் வீட்டுக்காரங்க எடுத்து நடத்தும் கல்யாணங்களில் பொதுவாகக்
காணப்படுவது. சில சமூகங்களில் பிள்ளை வீட்டினர் கல்யாணச் செலவை ஏற்பார்கள்.
அப்போது பெண் மேள, தாளத்தோடு, சீர் வரிசைகளை உறவினர்கள் ஏந்திவரக் குதிரைகள்
பூட்டிய சாரட்டிலோ, காரிலோ அழைத்து வரப்படுவாள். அதற்கு முன்னர் பெண்ணிற்குப்
பெண் வீட்டிலும், பிள்ளைக்குப் பிள்ளை வீட்டிலும் முக்கிய உறவின்முறையினர்
அலங்கரித்து அமர வைத்து நலுங்கு வைப்பார்கள். பின்னர் பிராமணர் அல்லாத மற்ற
சமூகத்தினரில் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்திக்குப்
பணம் போடுவது உண்டு. பணம் இத்தனை வேண்டும் என ஆரத்தி எடுக்கும் முக்கிய
உறவின் முறைப் பெண்கள் கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. ஆயிற்று. இப்போது
நம்ம கல்யாணத்தில் பெண் வீட்டினர் முன்னாடி வந்தாச்சு. எல்லாரும் சாமானைத்
தூக்கிண்டு உள்ளே போகிறாப்போல் கல்யாணப் பெண் போக முடியாது. அவளை ஆரத்தி
எடுத்து சுற்றிக் கொட்டி வலக்காலை முன் வைத்து வரச் சொல்லுவார்கள்.
இப்போதெல்லாம் இந்த ஆரத்தி வேலையையும் காடரிங்காரர்கள் பொறுப்பில்
இருந்தாலும் ஆரத்தி எடுக்கப் பெண்ணின் அத்தை, மாமி, பாட்டி சுமங்கலியாக
இருந்தால் பாட்டி என அழைக்கப்படுவார்கள். இது எல்லாம் கல்யாணத்திற்கு
முதல்நாள் ஆரத்திக்கு. மறு நாள் ஆரத்திக்கு பிள்ளை வீட்டினர் ஒருத்தர், பெண்
வீட்டினர் ஒருத்தர் என எடுக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.
என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!
றோமா?
எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.
அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா? ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.
இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.
கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க.இரண்டுமே பண்ணியாச்சு. கல்யாணம் ஒன்றில்லை. நிறையக் கல்யாணங்கள். அதிலே நாங்களே (நானும் என் மறுபாதியும்) கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கல்யாணங்கள் எங்க கல்யாணம் தவிர ஏழு அல்லது எட்டு இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சு நல்லா அனுபவிச்ச கல்யாணம்னு சொல்லணும்னா என்னோட சித்தி கல்யாணம் தான். அசோகமித்திரனின் மனைவியான இவங்க கல்யாணமே நான் விபரம் தெரிஞ்சு பத்துப் பதினோரு வயசிலே அனுபவிச்ச முதல் கல்யாணம். அப்போல்லாம் கல்யாணம்னா ஏதோ நாம ஜாலியா இருக்கிறதுக்கு மத்தவங்க பண்ணிக்கிறாங்க என்ற அளவில் மட்டுமே நினைப்பு இருக்கும். சொந்தக்காரங்க கூடுவதும், பக்ஷணங்கள் பண்ணுவதும், ஒரே கொண்டாட்டமாய் இருப்பதும், எல்லாத்துக்கும் மேல் பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பதும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.
என் கல்யாணமே எனக்குக் கொஞ்சம் விளையாட்டாகவே சில சமயம் தோணி இருக்கு. இதன் தாத்பரியத்தை நான் புரிஞ்சுக்கச் சில வருஷங்கள் தேவைப்பட்டன என்று சொல்வதில் வெட்கம் ஏதும் இல்லை. போகப்போகத் தான் புரிய ஆரம்பித்தது. கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். எது எப்படி இருந்தாலும் கல்யாணம் என்பதன் அடிப்படைத் தத்துவம் எதுவும் மாறவில்லை. சடங்குகள், சம்பிரதாயங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மற்ற வைதிக காரியங்களில் மாற்றம் இல்லை. கல்யாணம் என்றால் என்ன? ஏன்? எதுக்கு? எப்படி? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சரியா என்பதை எல்லாம் இங்கே வரும் நாட்களில் அலசுவோம். அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். மறுபடி கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதாலும், வேலைகள் இருப்பதாலும் அடுத்த பதிவுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம்.
'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்,"
இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது. சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை. அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும். இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும். அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது. அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?
அவையும் செல்லாதவையே. அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர். அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.
ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை. காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும். இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது. அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா?
"எனக்கொரு மகன் பிறப்பான்;
அவன் என்னைப் போலவே இருப்பான்"
எனப் பாடி ஆடுவதற்கா? அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன. அதைக் கழித்தாக வேண்டும், அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும். இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே. ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை. திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம். அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும். இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம். எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது. பார்க்கலாம்.
"மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா."
மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில். மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது. வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு. திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம். அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது. அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன. அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து,
"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"
என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான். திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம். உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம். அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது?
ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார். அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன். இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர். ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன. அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள். இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம்.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2013
(30)
-
▼
July
(26)
- Your browser does not support JavaScript! Instead,...
- தேவை, தேடுதல், போராட்டம், குழப்பம் ஏன்?
- ஆசையும் ஞானமும்
- உலகக் குடும்பம்
- கருமையப் பதிவுகள்
- மெளனம்
- விலங்கினப் பதிவு
- கருமையச் சிறப்பு
- முன்பின் பிறவிகள்
- எதையும் சாதிக்கலாம்
- மனதின் மூன்று நிலைகள்
- ஆன்மாவின் மூன்று நிலைகள்
- உயிரும் மனமும்
- கர்ப்பகாலப் பொறுப்புகள்
- வலி, நோய், மரணம்
- உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம்
- எங்க வீட்டு “மொட்டைக்காளி”
- கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
- பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
- கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
- ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் ...
- சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை
- சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!
- தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ?
- பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
- என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!
-
▼
July
(26)
Labels
tamil kavithaikal
(19)
online tamil kavithai
(18)
online tamil stories
(18)
tamil stories
(17)
tamil kavithai
(15)
tamil story
(13)
vinayagar chadurthi
(2)
vinayagar pooja
(2)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு
(2)
கடப்பாரையா ? ஊசியா
(2)
கணவா... - எல்லாமே கனவா
(2)
சிந்தனைகள்
(2)
சுமங்கலிப் பிரார்த்தனை
(2)
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
(2)
பெண்கள் நாட்டின் கண்கள்
(2)
மகளிர் தின வாழ்த்துக்கள்
(2)
மாடக் கொடி மதில் தென்குளந்தை
(2)
*விதை தராத விருட்சம் .*
(1)
Beauty of Tamil
(1)
Child Birth by Month
(1)
Kural 1000
(1)
LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL
(1)
Unmayana anbu sir ithu
(1)
White Lake Celebrations
(1)
White Lake anniversary
(1)
WhiteLake Celebrations
(1)
WhiteLake anniversary
(1)
devotee vinayagar
(1)
kural tamil translation
(1)
kuttalam kavithai
(1)
kuttalam tamil
(1)
pillaiyaar
(1)
tamil god vinayagar
(1)
tamil kavithai collection
(1)
tamil kavithai online
(1)
tamil kavithi templates
(1)
tamil kural
(1)
tamil kural blog
(1)
tamil திருக்குறள்
(1)
thirikooda rasappa kaviraayar
(1)
thirukkuruvoor
(1)
thirukkuruvur
(1)
thirukuruvoor
(1)
thirukuruvur
(1)
vinayagar chathurthi
(1)
vinayahar sathurthi
(1)
அண்ணாமலை சிவனேயன்றோ?
(1)
அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?
(1)
அனுதினமும் ஆனந்தமாய்
(1)
அப்படியே ஒரு ஷாக்
(1)
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
(1)
அம்பிகாபதி கதை
(1)
அருட்பெரும் ஜோதியே
(1)
அலர்மேல் மங்கை மகிழும் மணாளா
(1)
அழுவதும்... அணைப்பதும்
(1)
அவரைச் சுற்றி நிற்பவர்களே
(1)
அவர்கள் அறிவதில்லை
(1)
ஆசையிலும்
(1)
ஆசையும் ஞானமும்
(1)
ஆச்சிரியப்படும் வண்ணம்
(1)
ஆதியின் நிழல்
(1)
ஆனித் திருமஞ்சனம்
(1)
ஆன்மாவின் மூன்று நிலைகள்
(1)
ஆன்மீகப் புனிதம் காப்போம்
(1)
ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர்
(1)
இப்படிக்கு கொசு
(1)
இரண்டு
(1)
இருட்டில் கண்விழித்து
(1)
இளைஞ்ர்களும்..யுவதிகளும்
(1)
உங்க கல்யாணமாம் கல்யாணம்
(1)
உங்கள் மொபைல்
(1)
உடலின் இயக்கம்
(1)
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது
(1)
உடல் செயல்படும் விதம்
(1)
உண்மையின் நெருடல்
(1)
உமாபதி சிவாசாரியார்
(1)
உயிரும் மனமும்
(1)
உலகக் குடும்பம்
(1)
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
(1)
ஊர்த்துவ தாண்டவம்
(1)
எங்க வீட்டு “மொட்டைக்காளி”
(1)
எங்கள் அண்ணன் பிரபாகரனே
(1)
எங்கேயும் நான் தமிழனாக இல்லை
(1)
எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க
(1)
எதையும் சாதிக்கலாம்
(1)
என் சொத்து
(1)
என்ன கல்யாணமடி கல்யாணம்
(1)
எமன் வாகன அழைப்பு மணி
(1)
எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்
(1)
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
(1)
ஏனிந்தப் பாரபட்சம்
(1)
ஏன் உன் முகம் வாடியிருக்கு
(1)
ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது
(1)
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்
(1)
ஒண்ணும் ரகசியமே இல்லை
(1)
ஒரு அழகிய இளம்பெண்
(1)
ஒருநாள் நானாவேன்
(1)
ஓடி வரச்சொல்கிறாயா?....
(1)
கட்டாயத் திருமணங்கள்
(1)
கணக்கதிகாரம்
(1)
கண் திறந்து பார்த்தாள் ராதை
(1)
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
(1)
கனவு மெய்ப்பட வேண்டும்
(1)
கப்பல் பயணம்
(1)
கரடி
(1)
கருணை இல்லம்
(1)
கருமையச் சிறப்பு
(1)
கருமையப் பதிவுகள்
(1)
கரைந்து போனேன் நான்
(1)
கர்ப்பகாலப் பொறுப்புகள்
(1)
கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி
(1)
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
(1)
கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும்
(1)
கல்விச் சேவை
(1)
களைத்திருந்தாள் ராதை
(1)
கவிதை குற்றாலம்
(1)
காடவர்கோன் சிம்மவர்மன்
(1)
காதலர் தினமா? கலாசார சீரழிவா?
(1)
காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை
(1)
காளை கன்னியை சந்தித்தானா
(1)
கிரகங்களின் உச்ச வீடுகள்
(1)
குமுதமும் என் இலக்கு
(1)
கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
(1)
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே
(1)
குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?
(1)
குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
(1)
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
(1)
சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன்
(1)
சன்னல் நடுவே உன் முகம்
(1)
சிங்கப்பூர் ராணுவம்
(1)
சிதம்பர ரகசியம்
(1)
சித்தர் சிவவாக்கியர் பாடல்
(1)
சிரம் புறம் சாய்ந்ததே
(1)
சிறகுவிரி பிறகுசிரி
(1)
சில்லு'ன்னு ஒரு பொண்ணு
(1)
சிவானந்த பரமஹம்சர்
(1)
சுக முனிவர்
(1)
சுமங்கலி பூஜை
(1)
சுவையான கட்டை விரல் சூப்
(1)
சுவையான சீனி புட்டு
(1)
சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்
(1)
செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்
(1)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
(1)
சே.... என்ன வாழ்க்கை இது
(1)
சௌரம் என்றால் நான்கு
(1)
ஜப்பானிய தேசீய கீதம்
(1)
ஜயஸ்ரீ ராதே கிருஷணா
(1)
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
(1)
ஜோதிடக்கலை ஒரு கடல்
(1)
ஜோரான சேனி லட்டு
(1)
தங்க ரதம் வந்தது வீதியிலே
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தத்துவஞானியிடம் வேடிக்கை
(1)
தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது
(1)
தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல்
(1)
தமிழ் தன்மானத்தின் மிச்சம்
(1)
தமிழ் வருடங்களின் பெய்ர்கள்
(1)
தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
(1)
தலை சாய்த்த காக்காய்
(1)
திருக்கண்ணபுரத்து திருவருள்
(1)
திருக்குறள் 1000
(1)
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
(1)
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா
(1)
துகாராம் தான் என் வாழ்க்கை
(1)
தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை
(1)
துர்வாச முனிவர் நடு இரவில்
(1)
தேவியின் பொன் மேனி தள்ளாட
(1)
தொல்காப்பிய சூத்திரம்
(1)
நட்பு உயிரை விட மேலானது
(1)
நட்புக்கு கூட கற்ப்பு உண்டு
(1)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
(1)
நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது
(1)
நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில்
(1)
நாட்டுக் கோட்டை நகரத்தார்
(1)
நான் தேசபக்தன் அல்ல பாமரன்
(1)
நாமாய் பேசிய நாட்களை
(1)
நிலவை நின்று தொடும் காதல் கோபுரம்
(1)
நிழல் கிரகங்கள் இரண்டு
(1)
நீ ராதையை மணக்கவே முடியாது
(1)
நெருங்கிப் பழகாதே நெஞ்சமே
(1)
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
(1)
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
(1)
பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை
(1)
பதினெண் சித்தர் யார் யார்?
(1)
பயன் தரும் பதிவு
(1)
பயம் கண்டு ஓடுபவர்க்கோ
(1)
பாரத நாட்டிற்கு இது அவசியமா?
(1)
பார் மகளே பார்
(1)
பால் - பழச் சடங்கு
(1)
பாவம் ராகம் தாளம்
(1)
பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12
(1)
பிரிவின் கதை சொல்லி
(1)
பிறவியை அறுப்போம்
(1)
பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன்
(1)
பூம் பூம் மாட்டுக்காரர்கள்
(1)
பூவின் இதழ் தொட்டு
(1)
பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு
(1)
பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா
(1)
பென்மையை என்றும் போற்றுவோம்
(1)
பொங்கி வரும் பெரு நிலவு
(1)
பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
(1)
மணவாழ்க்கைச் சட்டம்
(1)
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
(1)
மனதின் மூன்று நிலைகள்
(1)
மனித உடல் மனம் உயிர்
(1)
மறுமைக்கு பயனேதும் இல்லை
(1)
மாதா பிதா குரு தெய்வம்
(1)
மாமியாருக்கும் சாமியாருக்கும்
(1)
முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி
(1)
முதல் நாளிலேயே ஞானோதயம்?
(1)
முன்பின் பிறவிகள்
(1)
முயற்சித் திருவினையாக்கும்
(1)
முழுப்பார்வை வீச்சு
(1)
யமராஜ் சும்பக் ஜர்னா
(1)
யார் அந்த மஹாபெரிய ரிஷி
(1)
ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா
(1)
ராகுவும் கேதுவும்
(1)
ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்
(1)
வன விலங்குகளிலேயே மிக அழகானது
(1)
வரலாறு மறந்து விட்டோம்
(1)
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
(1)
வாக்கினால் பிறந்த வேதவதி
(1)
வானம் வசப்படும்
(1)
வால் நட்சத்திரம்
(1)
வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு
(1)
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
(1)
விகடனும்
(1)
விஜி அக்கா எழுதினாங்க
(1)
விநாயகர் பிறந்தநாள்
(1)
விலங்கினப் பதிவு
(1)
விழித்துவிடு கனவா விழித்து விடு
(1)
வெஸ்டர்ன் கல்சர்
(1)
வேதாந்தமும் சித்தாந்தமும்
(1)
வேர்களைத் தேடி
(1)
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை
(1)
ஸால்மன் மீன்
(1)
ஸ்கந்த புஷ்கரணி
(1)
ஸ்டெரிலைஸேஷன்
(1)
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம்
(1)