அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாம் தவிக்கையில் நமக்கு ஆறுதல் கூறித் தேற்றி, நம்பிக்கையூட்டுவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஜோதிடர்கள், நிமித்தக் காரர்கள், கோடங்கிகள் அல்லது குடுகுடுப்பாண்டிகள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் முதலானோர்.
இவர்களுள் ஏமாற்றுபவர்கள், அதாவது தீய பலன்களைக் கூறிப் பரிகாரமாகச் சடங்குகள் செய்யவென்று பணம் பறிப்பவர்கள் பலர் இருப்பினும், அத்தகைய ஏமாற்றுக்காரர்களைத் தவிர்த்துப் பார்க்கையில், பொதுவில் இத்தகைய பணியைச் செய்பவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளும், நல்ல காலம் வரும் எனும் நம்பிக்கையூட்டும் செயலும் மிகவும் பாராட்டத்தக்கவை.
ஆங்கிலேயர் ஆட்சி நமது நாட்டில் நடைபெற்ற காலத்தில் ஒரு கிராமத்தில் சிறு வயதிலேயே தாயை இழந்த கள்ளங்கபடறியாக் கன்னிப்பெண் கண்ணம்மா தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். ஜமீன்தாரர் ஆட்சி முறை நிலவிய அக்காலத்தில் அவ்வூர் ஜமீன்தாரரின் ஓரே மகன் ராஜா அவளது அழகிலும் அடக்கத்திலும் கவரப்பட்டு அவளிடம் காதல் கொளகிறான். தான் ஊர் ஜமீன்தாரரின் மகன் என அறிந்தால் அவள் தன் காதலை ஏற்கமாட்டாள் என்பதால் தான் ஜமீன்தாரரின் பண்ணையில் பணி செய்யும் ஒரு பண்ணையாள் எனப் பொய்யுரைத்து அவளது காதலைப் பெறுகிறான்.
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்" எனும் கூற்றுக்கிணங்க இவர்களது காதல் விவகாரம் ஜமீன்தாரரின் காதுக்கு எட்டவே அவர் கடுங்கோபம் கொண்டு அவர்களது காதலுக்குத் தடை விதிக்கிறார். "உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை" எனும் மஹாகவியின் சொற்களுக்கேற்ப ஏமாற்றத்தால் ஊண் உறக்கம் பிடிக்காமல் மனம் பேதலித்த நிலையில் அவள் இருக்கையில் அவளது வீட்டுக்கு அலங்கரிக்கப்பட்ட தனது மாட்டுடன் வரும் ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் அவளது மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே படம் பிடித்தவன் போல் அவளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பாடலாகப் பாடுகிறான்.
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.